Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Monday, 7 December 2020

பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் - சிற்றறிவிற்கு எட்டிய வரையில்...

 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

பாம்பன் சுவாமிகள் அருளிய பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் ஓசைநயமும், நவின்றோர்க்கு இனிமை பயப்பதும், பொருள் ஆழமும் உடையது. இந்தப் பஞ்சாமிர்த வண்ண பாராயணம் கேட்கும் பொருட்டு, திருமுருகன் தன் திவ்விய திருவடி தாமரைகள் புழுதிப் படிய, பிராட்டியோடு இந்தப் பூமிக்கு வந்து, தன் செந்நாவினை அசைத்து "இவ்வண்ணம் எனக்கு பிரீதியாய் உள்ளது. அஃது எங்கே பாராயணம் செய்யப்படுமோ அங்கே யான் வருவேன் இருப்பேன்" என்று கூறினான் என்றால் இதன் சிறப்புகளைச் சிற்றறிவுடைய அடியேனால் விளக்கவும் முடியுமோ? ஆயினும், அடியேன் இவ்வண்ணத்தில் இரசித்தச் சிலவற்றை இங்கே பதிவிடுகின்றேன்.

பொருட்சுவை:

இவ்வண்ணத்தில் சுவாமிகள் முதலில் முருகப் பெருமானை அறிமுகம் செய்யும் அழகே மகிழத்தக்கது. அனைவரும் என்றன் சொந்தம் இன்னும் அவர்களுக்கு தீது ஏது? என்று கூறி அவன் அவர்களைக் காக்கும் பொருட்டு அங்கங்கே உள்ள படைகளைக் கண்டு ஓயாது வேலினை ஏந்தி கொண்டு நிற்கின்றான் என்று கூறுகின்றார். 

என்றன் சொந்தம் இனும் தீது ஏது
என்று அங்கங்கு அணி கண்டு ஓயாது
ஏந்துவன் படை வேல்....

"அண்டும் (நாடுகின்ற) தொண்டர் வருந்தாமே இன்பம் தந்தருளும் தாளா" (தாளா=திருவடி உடையோனேஎன்ற சொற்றொடரும் இன்பம் தரும்.

வள்ளியம்மையைச் சொல்லும் போது, வேட்டுவர் குலம் நலம் பெற அவர்களிடையே மகளாகத் தோன்றிய பெண் என்று கூறுகின்றார்.

 "குன்றவர் நலம் பொருந்திட வளர்ந்த பந்தனை எனும் பெண்"

 (பந்தனை = மகள்)

அப்படி என்ன நலத்தை வேட்டுவ குலத்தினர் பெற்றார்கள்? இதற்கான பதிலைச் சுவாமிகள் ஸ்ரீமத் குமாரசுவாமியத்தில் கூறியுள்ளார். அது என்னவென்றால், அனைத்து உலகையும் ஆளும் தானம் மிக்கு உள்ளவன் முருகன், அவனுக்கு என் பெண்ணைத் தானமாக கொடுக்கின்றேன்‌ என்றால் அடியேன்‌ பெற்றப் பேறு யார்‌ பெறுவார்‌ என்று நம்பி ராஜன் மகிழ்ந்ததாகச் சுவாமிகள் கூறுவார்.

சுவாமிகள் தெய்வயானைப் பிராட்டியைக் கூறும் போது கரும்பு எனும் சொல்லை இயம்பு குஞ்சரி என்று கூறுகிறார். "உம்மை வணங்கும் அடியவர்களுக்கு அருளுக" என்று தாய் போல் தந்தையிடம் பரிந்து சொல்வதாலோ அம்மையின் மொழிகளை கரும்பு போல் இனிக்கும் மொழிகள் என்று சுவாமிகள் கூறுகின்றார். சண்முக கவசத்திலும் ரஞ்சித மொழி தேவானை என்று சுவாமிகள் கூறுகின்றார்.

வள்ளியம்மையின் மொழிகளைக் கூறும்போது அவை, அழகு மிக்க கொஞ்சு மொழி உள்ள கிளிச்சொல் என்று கூறுகின்றார்.

மஞ்சுலம் உறைந்த கிஞ்சுக நறுஞ்சொல்...

(மஞ்சுலம் = அழகு; கிஞ்சுகம்=கிளி)

தமிழால் வழிபடுபவர்களின் பெருமையைக் கூறும் போது, "பெருகியுள்ள செந்தமிழ் பாக்களால் தினமும் இன்பத்துடன் துதிக்கும் அடியவர்களின் உள்ளத்தைத் தெளிவித்து அருள்பவனாக முருகன் உள்ளான்" என்று கூறுகின்றார்.

படர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு 
பதம் குரங்குநர் உளம் தெளிந்தருள் 
பாவகியே சிகி ஊர் இறையே

(குரங்குநர்=வணங்குவோர்)

சுவாமிகள் முருகனிடம் சில வரங்களை அடுக்கிக் கொண்டே செல்லும் நயம் இனிமையானது. முதலில் பிறவியாகிய கடலைக் கடக்க அருள் வேண்டுகின்றார்; பின் இறைவனின் துணை கிடைக்க வேண்டுகின்றார். அதன்பின் தன் பிழைகளை நீக்க வேண்டுகின்றார். பிறகு சுவாமிகள் பாடவும் அதைக் கேட்டு முருகன் ஆடவும் வேண்டும் என்று வேண்டுகின்றார். தொடர்ந்து குளிர்ச்சியான கருணையை எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று கேட்கின்றார். இவ்வளவு வரங்களையும் எவ்வளவு சுருக்கமாக இசைத்தமிழில் கேட்டு உள்ளார்! காண்க!

பவக்கடல் என்பது கடக்கவும் நின்துணை
பலித்திடவும் பிழை செறுத்திடவும் கவி
பாடவும் நீ நடம் ஆடவுமே
படர்ந்து தண் தயை நிதம் செயும்படி....

இன்னும் பற்பல பொருட்சுவைகள் நிரம்பி உள்ளன.  விரிவு அஞ்சி இவ்வளவில் பொருட்சுவை பற்றிய கருத்துகளை முடிக்கின்றேன்.

கவிச்சுவை:

சுவாமிகள் உமையம்மையின் பாதங்களை வர்ணிக்கின்றார். அம்மையின் கால்கள் செக்கச் சிவந்து உள்ளன. அதைக் கண்டு செம்மையான தாமரைகள்  நம்மைக் காட்டிலும் இவ்வளவு செம்மையா என்று அஞ்சுகின்றன.  மேலும் அந்தக் கால்கள் உயிர்கள் தஞ்சம் என்று சென்று சேர்வதற்கு உரிமையான கால்கள் என்று கூறிய கவிநயம் அழகியது.

தஞ்சம் சேர் சொந்தம் சால் அம் செம் பங்கயம் அஞ்சும் கால்.....

(அம்= அழகு; பங்கயம்=தாமரை)

தயிர் வண்ணத்தில் சில வரங்களை வேண்டிய சுவாமிகள் நெய் வண்ணத்தில் உரிமையுடன் முருகனைச் சிலவற்றைச் செய்ய சொல்லுகின்றார்.

பிணமா முனமே அருள்வாய் அருள்வாய்
துனி யாவையும் நீ கடியாய் கடியாய்
பிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு

(பிசி = பொய்)

இங்கு பொய் முதலான பல பிழைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டுகின்றார். அவ்வாறு வேண்டும் போது "பொறு பொறு பொறு பொறு" என்று நான்கு முறை கூறுகின்றார். உயிர்கள் வந்த நாள் தொட்டு இன்றைய நாள்வரை செய்துள்ள தீமைகள் பெருமலைப் போல் இருப்பதால், பொறு என்ற சொல்லை பலமுறையும் கூறியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

முருகப் பெருமானின் ஊர்தி மயில்; அது குகா குகா என்று அகவும்; மயிலுக்கு முன் முருகனின் ஊர்தி ஆடு ஆகும். அது 'மே..மே..' என்று கத்தும். இவ்வாறு கத்துவதற்கு ஏதேனும் பொருள் உண்டோ? இல்லையே! என்று தான் இருந்தேன். சருக்கரை வண்ணம் படித்தபின் புரிந்தது அது அவ்வாறு கத்துவதன் காரணம்:

பொக்கறு புகழினை அளிக்கு 'மே'
பிறந்து செத்திட தொலைக்கு 'மே'
புத்தியில் அறிவினை விளக்கு 'மே'
நிறைந்த முத்தியும் இசைக்கு 'மே'....

'மே' என்னும் தேற்ற ஏகாரம் சருக்கரை வண்ணத்தில் அதிகமாக விரவியுள்ளது.

தேன் வண்ணத்தில், பலருடைய ஆடல்களைக் காட்சிபடுத்துகின்றார் சுவாமிகள். அத்துடன் முருகனின் வேல், மயில், கோழிக்கோடி, காதில் உள்ள குழைகள் போன்ற அனைத்தும் ஆடுகின்றன என்று கூறிய சுவாமிகள்,  ஓரிடத்தில் முருகனின் சிரிப்பைக் காட்டுகின்றார். முருகன் சிரிக்கும் போது ஒளி தோன்றுகின்றது. அந்த ஒளியும் ஆடுகின்றது என்பதை "மூரல் ஒளியாட" என்று பாடிய சுவாமிகளின் கவிச்சுவை களிப்பைத் தரும்.

சந்தச்சுவை:

பஞ்சாமிர்த வண்ணம் - வண்ணப்பாடல் என்பதால் ஓசை நயத்திற்குக் குறைவே இல்லை. சாதாரணமாக படிக்கும் போதே ஓசை ததும்பும். இசையொடு பாடினால் மதுரமாய் இருக்கும். இசைவாணர்கள் பற்பல இராகங்களில் இசையமைத்துப் பாட இடம் கொடுக்கும். ஒரே ஒரு உதாரணத்தைக் காட்ட விழைகின்றேன். உமையம்மையின் நடன காட்சியைக் குறிக்கும் போது,

தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா
தாந் ததீ ததீ ததீ ததீ
ததிமிதி தத்தித் தரிகிட தத்தத்
திரிகிட தத்தத் தெய்.....

இந்த ஜதி சொல்வது போன்ற இந்த ஓசை அமைப்பில், "தாந் ததீ ததீ ததீ ததீ" என்று சொல்லும் போது இடைவெளி விட்டுவிட்டுக் குறைந்த வேகத்தில் நடக்கும் ஓசையும், அதன்பின் "ததிமிதி தத்தித் தரிகிட தத்தத் திரிகிட தத்தத் தெய்" என்று சொல்லும் போது ஓசை  முடுகிச் சென்று துள்ளல் ஓசையாய் இனிமை பயக்கின்றது. கற்றறிந்த இசைவல்லுநர்கள் யாரேனும் ஊன்றிப் பார்த்து இந்தத் தலைப்பில் கீழ் (சந்தச் சுவை) ஆய்வு மேற்கொண்டால் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மிக்க பயனளிக்கும்.

சொற்சுவை:

சூரபத்மனைப் பிளந்தச் செய்தியைக் கூறுமிடத்துச் சுவாமிகள் "துவந்துவம் பட வகிர்ந்து வென்று" என்று பாடியிருப்பார்.   இங்கே துவம் துவம்பட என்பது இரண்டு இரண்டாகும்படி என்ற பொருள். அதாவது 'சூரன், பதுமன் என்ற இருவரை (துவம்), சேவற் கொடியும் மயிலுமாக (துவம்பட=இரண்டாக) மாற்றினார் என்றும் பொருள் கொள்ளலாம். சண்டை இட்டு (துவந்துவம்=சண்டை)  பிளந்தார் என்றும் வேறு விதமாகப் பொருள் கொள்ளலாம்.

சுவாமிகள் நோய் என்பதைக் குறிப்பதற்கானப் பொருளுடைய பல சொற்களைப் பால் வண்ணத்தில் பயன்படுத்தி உள்ளார். அவை பிணி, அழுங்கல், அணங்கு, நோய், புன்கண் என்பன.

கூன் செயும் 'பிணி' கால் கரம் வீங்கு 'அழுங்கலும்' வாய்
கூம்பு 'அணங்கு' க(ண்)'நோய்' துயர் சார்ந்த 'புன்கணுமே'

இவை கற்போருக்குத் தமிழ் அறிவை விருத்தி செய்யும்.

சருக்கரை வண்ணத்தில், மண்ணுலகினைக் குறிக்க 'பூ' என்ற ஓரெழுத்துச் சொல்லையும், விண்ணுலகத்தைக் குறிக்க 'மீ' என்ற ஓரெழுத்துச் சொல்லையும் பயன்படுத்தி உள்ள நயம் அருமையானது.

'பூ' தலந் தனிலேயும் நன்குஉடை
'மீ' தலந் தனிலேயும் வண்டுஅறு
பூ மலர்ந்து உன் நாத அம்பத
நேயம் என்பதுவே தினந்திகழ்

மேலும் தேன் வண்ணத்தில், "காலிலியுமே ஆட" என்று கூறுகின்றார். இந்தக் "கால் இலி" என்ற சொல் சனிஸ்வரருக்கும் வாயு தேவருக்கும் பொருந்துமாறு உள்ளது. ஒரு சொல்லே இருவரை நினைக்குமாறு அமைந்துள்ளது.

வேடர் குலத்தைச் சிறப்பிக்க சுவாமிகள், "நாகரிகமே மேவு வேடர் மகள் ஆட" என்று பாடியுள்ளார். நாகரிகம் என்பது பண்பின் உச்சம்; தமக்கு கேடு வந்தாலும் பிறர் எத்துணையும் கேடு உறுதல் கூடாது என்று எண்ணும் நோக்கம். தியாகத்தைக் குறித்தது. இந்த நாகரிகத்திற்கு உரியவர்கள் வேடுவர்களே! வேடுவர் குலத்தில் பிறந்த கண்ணப்பரே, தான் கண்கள் இழந்தாலும் பரவாயில்லை, ஈசன் கண் பெற வேண்டும் என்று கண்ணெடுத்து அப்பினார் அல்லவா? இதனால் அன்றோ "நாகரிகம் மேவும் வேடர் மகள்" என்று சுவாமிகள் சிறப்பித்தார்.

தேவயானை அம்மையின் நடனத்தைக் குறிக்கும் போது "அருள் நய ஆனை மகள் ஆட" என்றார். கருணையுடன் செய்யும் நன்மைக்கு அடையாளமாய் தெய்வானை அம்மையைக் கூறினார். வள்ளிநாயகியாருக்கு "நாகரிகம்" என்ற அடைச் சொல்லும்; தெய்வானையாருக்கு "நயம்" என்ற அடைச் சொல்லும் புதுமை நலம் பயக்கின்றன.

கார்த்திகை 24ம் நாளில் சுவாமிகள் இந்தப் பேரின்ப வண்ணப் பாடலைப் பாடிய நாள். இந்த வருடத்தோடு 129 ஆண்டுகள் (09.12.2020) முடிகின்றன. இதனை முன்னிட்டு அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சிறிய கட்டுரையாக அமைத்துள்ளேன். இக்கட்டுரையில் ஏதேனும் சிறப்புகள் காணப்படின் அவை சுவாமிகள் இட்ட பிச்சை என்று மகிழ்கின்றேன். ஏதேனும் குறைகள் காணப்படின் மன்னித்து அருள வேண்டுகின்றேன்.

திருச்சிற்றம்பலம்!

Monday, 16 November 2020

பாம்பன் சுவாமிகளின் பாதம் பட்டால்...

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

பெரியது என்ன? என்ற கேள்வி எழுந்த போது, கல்வியங் கடலைக் கடந்து மேன் மிளிரும் கருத்துடை ஒளவை மூதாட்டி தொண்டர்களே (இறையடியவரே) பெரியவர்கள் என்று உரைத்தார். இத்திறத்த தொண்டர்களின் காலடிகள் இந்த அடிமையின் தலையில் பட்டால் பிரமலிபி (தலையெழுத்து/தலைவிதி) அழிந்தே விடும் என்கின்றார் பாம்பன் சுவாமிகள். இக்கருத்துகள் ஏதோ மகிமை படுத்துவதற்காக சொல்லப்படுவன அன்று. இது சத்தியமே. இதன் உண்மையை, நாம் அனைவரும் அறிந்த சுவாமிகளின் வரலாற்றின் மூலமாகவே மெய்ப்பிக்கலாம்.

பிரப்பன் வலசை என்னும் ஊரில் உள்ள சுடுகாடு. அங்கே பிணங்களும், பேய்களும், பாம்புகளுமே உண்டு. கோயில் சுடுகாடு என்று திருவாசகம் கூறினாலும் நம்மனோர் செல்ல அஞ்சுகின்ற இடம் சுடுகாடு. சுவாமிகள் தவம் செய்தது சுடுகாடு தான் என்பதைச் சுவாமிகளின் வாக்கினாலேயே அறியலாம். சுவாமிகள் ஈம மா நிலம்​ என்று இந்தச் சுடுகாட்டினைத் தம் பாடலில் கூறிப்பிட்டு உள்ளார்.

சுவாமிகளின் காலடிகள் இந்தச் சுடுகாட்டில் பட்டனதால், சிவனை நிகர் பொதிய வரை முநிவன் என்று அருணகிரிநாதரால் புகழப்பெற்ற அகத்தியப் பெருமானின் சிற்றடிகளும் சுடுகாடாக இருந்த இந்நிலத்தில் பட்டன.

சுவாமிகளின் காலடிகள் இந்தச் சுடுகாட்டில் பட்டனதால், இன்பக்கடல் படிந்த எந்தை அருணகிரி என்று பாம்பன் சுவாமிகளால் புகழப்பெற்ற சந்தமுனிவரின் சீரடிகளும் சுடுகாடாக இருந்த இந்நிலத்தில் பட்டன.

சுவாமிகளின் காலடிகள் இந்தச் சுடுகாட்டில் பட்டனதால், திருமாலும் அயனும் தேடி அறியா திருமுருகனின் திருவடிகள் சுடுகாடாக இருந்த இந்நிலத்தில் தோய்ந்தன.

இந்நிலம் கோயிலும் கண்டது. இன்று தஞ்சம் என்று பல உயிர்கள் வந்து அருள்பெறும் இடமாய் உள்ளது. இங்குள்ள முருகப் பெருமானைப் பற்றிச் சுவாமிகள் பிரப்பன்வலசை பதிகத்தில் கூறும்போது,

தஞ்சம் என நின்றவர்கள் அஞ்சன்மின் எனச் சொல் உரை தந்து அருள்புரி
நம் சிவபிரான் எனும் மயூர
முருகையர்

இதன் பொருள்: நம்முடைய சிவபிரான் ஆகிய மயில் ஊரும் முருகையன், தஞ்சம் என்று நிற்பவர்களுக்கு "அஞ்சற்க" என்ற சொல்லினைக் கூறி அருள்புரிகின்றான்

எனவும், மேலும் ஒரு பாடலில்

உள்ளபடி உன்னுபவர் உள்ளபடி உய்யஎன உன்னு பெரிய
வள்ளல் முருகையர்

இதன் பொருள்: இறைவனை உண்மையாக நினைப்பவர்கள், உண்மையாகவே உய்தி பெற வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு பெரிய வள்ளல் முருகையர்

(உள்ளபடி – உண்மையாக; உன்னுதல் = தியானித்தல்/நினைத்தல்; உய்ய – உய்திபெறல்)

என்று முருகனின் கருணையையும் அருட்கொடையையும் இப்பதிகத்தில் பாடி உள்ளார்.

அருள் வரலாற்றில், ஒரு ஞானியின் காலடிகள் பட்ட இடம் எவ்வளவு சிறப்புகளைப் பெற்றன என்பதை நாம் கண்கூடாகக் காணலாம். பாம்பன் சுவாமிகள் திருவடிகள் பட்டனதால் பேய்கள் நடமாடும் சுடுகாடே , சகல நன்மைகளைத் தரும் கோயிலாக மாறியது என்றால், சுவாமிகளின் திருவடிகளை நம் இதயத்தில் பதிந்தால், பொறாமை, வஞ்சம் முதலான மனத்தில் உள்ள பேய்கள் அழிந்து இறைவன் வாழும் கோயிலாக நம் மனம் மாறும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு: பாம்பன் சுவாமிகளின் கருணையினால், அவர் திருக்காலடிகளின் சிறப்பினைக் கூறி, இந்தக் கோணத்தில் இக்கட்டுரையை எழுத ஆற்றுப்படுத்திய பாம்பன் அடியார் திரு. குருமூர்த்தி அவர்களுக்கு நன்றி!

திருச்சிற்றம்பலம்

Tuesday, 3 November 2020

இதிகாச காட்சியும் பாம்பன் சுவாமிகளின் பதிவும்

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

தகரவெளி இறைவனை உணர்ந்து தகர வித்தையைக் கைவரப் பெற்ற மகான்கள், அனைத்து உயிர்களிலும் இருப்பார்கள்; அனைத்து உயிர்களும் அவருள் கலந்து இருக்கும். இதனைத் தெளிவாக உணர்த்தும் விதமாகப் புராணத்தில் ஒரு காட்சி காணப்படுகின்றது.

வியாசரின் புத்திரர் சுகபிரம்மர். தகர வித்தையை நன்கு கற்றறிந்தவர் இவர் பிறந்ததில் இருந்து தந்தையை விட்டுப் பிரிந்ததில்லை. ஒருநாள், திடீரென காட்டுக்குள் ஓட ஆரம்பித்தார். பின்னால் ஓடிய வியாசர் "மகனே! மகனே' எனக் கூவி அழைத்தார். உடனே அங்கிருந்த மரங்களெல்லாம் "என்ன என்ன' என்று கேட்டதாம். அதாவது சுகபிரம்மர் வேறு, தாங்கள் வேறு அல்ல என்று காட்டிக் கொண்டன. மரங்கள் மட்டுமல்ல, அங்கிருந்த பறவைகள், விலங்குகள், மலைகள், நதிகளும் "என்ன என்ன' என்றனவாம். சுகப்பிரம்மரும் தாங்களும் ஒன்றே என்ற மனநிலையை அவை கொண் டிருந்தன. அதனால், அவரது பிரதிநிதியாக அவை பதிலளித்தன. இந்த உலகிலுள்ள "எல்லாமே அவர்' என்ற வகையில் அவர் மேம்பட்ட நிலையில் இருந்தார். "சர்வபூத ஹ்ருதயர்' என்று அவரை அழைத்தனர். இதுவே தகராலய இரகசிய நிலையும் ஆகும். இதுவே அமல முத்தி நிலை என்று சுவாமிகள் கூறிப்பிடுகின்றார். 

இந்த அற்புத காட்சியைச் சுவாமிகள் முதல் மண்டலத்தைச் சார்ந்த சிவலோக சுந்தர மாலை என்ற பதிகத்தின் 27ஆம் பாடலில் மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

தந்தைசுத னேயென்ற தருணமவ ணேனேனென்
றந்தமொடு செடிமரங்க ளதிர்தனவா லமலமுத்தி
பெந்தமிலா நிறைவதனைப் பெற்றவரு மெண்ணிலரே
சிந்தைமகிழ்ந் தருள்வதெந்நாள் சிவலோக சுந்தரனே

இதன் பொருள்:

தந்தை சுதனே என்ற தருணம்: தந்தையாகிய வியாசர் தன் மகன் சுகமுனிவரை மகனே என்று அழைத்த தருணம்

அவண் ஏன் ஏன் என்று அந்தமொடு செடி மரங்கள் அதிர்தனவால் அமல முத்தி: அங்கு (அவண்=அவ்விடம்) இருந்த செடி மரங்கள் முதலான அனைத்தும் என்ன என்ன என்று பதில் சொல்லியன. இதுவே தகராலய நிலை; மலங்கள் இல்லாத முத்தி நிலையுமாம்

பெந்தமிலா நிறைவதனைப் பெற்றவரும் எண்ணிலரே: எந்த வித பந்தமும் பற்றுமற்ற (பெந்தம் - பந்தம்/கட்டு) பூரண நிலையும் இதுவே; இந்த நிலையைப் பெற்ற அருளாளர்களும் எண்ணில் அடங்கார்.

சிந்தை மகிழ்ந்து அருள்வது எந்நாள் சிவலோக சுந்தரனே - இந்த தகராலய நிலையை திருவுளம் மகிழ்ந்து அடியேனுக்கு அருளும் நாள் எந்த நாள்? சிவலோக சுந்தரனே!!!

இது போன்ற புராணக் காட்சிகளைப் பாம்பன் சுவாமிகள் தம்முடைய பாடல்களில் பதிந்து, நம்மனோர் முத்தி நிலையை எளிதில் புரிந்து கொள்ளவும்; அந்நிலையை நாமும் இறைவனிடம் கேட்கும் பொருட்டு அமைத்துள்ள கருணையைப் பல இடங்களிலும் காணலாம்.

குருவருள் வாழ்க!!!

திருச்சிற்றம்பலம்

Sunday, 18 October 2020

பாமகள் பாடியப் பாடல்கள்

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

     சரசுவதி தேவியைப் புகழும் பல பாடல்கள் உள்ளன. ஆனால் சரசுவதியே போற்றிப் பாடிய பாடல்கள் உள்ளனவா?  உள்ளன! ஆம் கலைமங்கையே  சாவா மூவா முருகப் பெருமானைப் போற்றிப்  பாடிய செய்தியை பாம்பன் சுவாமிகள் ஸ்ரீமத் குமாரசுவாமியம் நூலில் தெரிவிக்கின்றார். திருக்கந்தகிரி திருவிளையாடல் - இரண்டாம் பத்து என்ற பகுதியில் கீழ்வரும் ஆறு பாடல்களில் இவ்வரிய செய்தியைக் காணலாம்.

     திருக்கந்தகிரியில் முருகப் பெருமான் தம்முடைய இருதேவிமார்களும் சூழ மகா வனப்புடன் திருக்காட்சியை நல்கினார். இப்பெரும் காட்சியைக் கண்ட கலைமகள் பாடத் தொடங்கினாள்:

கலிவிருத்தம் - அடி ஒன்றுக்கு பதின் மூன்று எழுத்து

அரிய விப்பெருங் காட்சிமுன் னங்கலைமா
துரிய நற்கலன் மீட்டியு மாசுதனே
பெரிய வித்தகர் சித்தருள் ளேபெரியார்
தெரிய நச்சுநர் நின்றனை யேதெரிவார்

அரிய இப்பெரும் காட்சி முன் - அருமையான இப்பெரும் காட்சியின் முன்பு

அம் கலைமாது உரிய நற்கலன் மீட்டி - அழகிய கலைமாது தனது நல்ல வீணையை (கலன்=வீணை) மீட்டி..... (பாடத் தொடங்குகின்றாள்)

உமா சுதனே பெரிய வித்தகர் சித்தருள்ளே பெரியார் தெரிய நச்சுநர் - உமையின் மைந்தனே! பெரிய ஞானிகளுள்ளும் சித்தர்களுள்ளும் பெரியார் யார்? என்று தெரிந்துக் கொள்ள விரும்புபவர்;

நின்றனையே தெரிவார் - உன்னையே பெரியாராக அறிவார்

அடி ஒன்றுக்கு பன்னிரண்டு எழுத்து

ஈச தேசிலி ளந்திரு விற்றலைமை
பேச வேபிறி தின்றுனை யன்றிநின்மா
நேச தேவிகள் பக்கமு மந்நிலையாம்
மாச ணாதவுன் மைந்தைவென் மைந்துமிலை

ஈச தேசில் இளந்திருவில் தலைமை பேசவே - ஈசனே! ஒளிவீசும் (தேசு=ஓளி/தேஜஸ்) தன்மையிலும் இளமை செல்வத்திலும் தலைமையானது எது என்று பேசினால்

பிறிது இன்று உனை அன்றி - உன்னை அன்றி வேறு பொருள் இல்லை

நின் மா நேச தேவிகள் பக்கமும் அந் நிலையாம் - உன்னுடைய அன்பார்ந்த பெருமையுடை  தேவிகள் பக்கமும் இதுவே உண்மையாம். அதாவது முருகனின் ஒளியும் இளமைநலனும் அவர்தம் தேவிகளுக்கும் பொருந்தும்.

மாசு அணாத உன் மைந்தை வெல் மைந்தும் இலை - மாசு பொருந்தாத உன்னுடைய வலிமையை வெல்ல எந்த வலிமையும் இல்லை. 

மைந்து என்றால் வலிமை என்றும்; இது தூய தமிழ்ச் சொல் என்றும் சுவாமிகள் சேந்தன் செந்தமிழில் கூறியுள்ளார். மைந்தன் என்ற சொல் மகனைக் குறிக்க ஏன் வந்தது என்றால், தந்தை தளர்வுற்ற காலத்தில் மகன் வலிமையாய் இருந்து தாங்குதற்காகவே என்றும் சுவாமிகள் விளக்கி உள்ளார். 

வேதன் யாக்கைமெ லிந்துய்ய வெஞ்சிறைசெய்
நீத னார்க்குண னீயல தேவர்கொலோ
ஓதல் கேட்டலி லாதினி தோம்பொருளை
ஓத மாக்குரு வுண்டுகொ லோபிறருள் 

வேதன் யாக்கை மெலிந்து உய்ய வெஞ்சிறை செய் - பிரமாவின் (வேதன்=பிரமன்) உடம்பு மெலிந்து உய்தி பெறும்படி சிறைசெய்யும்

நீதன் ஆர்க்குணன் நீயலது ஏவர் கொலோ - நீதிமானும் (கருணை) நிறைந்த குணம் உடையவன் உன்னை அல்லால் பிறர் யாவர்­? 

ஓதல் கேட்டல் இலாது இனிது ஓம் பொருளை ஓத - கற்றலும் கேட்டலும் இல்லாமலேயே பிரணவப் பொருளை நன்கு எடுத்து உரைக்க

மாக்குரு உண்டு கொலோ பிறருள் -​ பெருமை உடைய ஞானாசிரியன் உன்னையன்றி பிறருள் ஒருவர் உண்டோ­?

பம்புன் வேலினு மிக்கப டைக்கலமின்
றும்பர் தார்களு ளிந்துள மொப்பதுமின்
றம்ப ராவுவை யங்களு ணீயளியால்
நம்பு மாமயில் போல்வதின் றேநயனால்

பம்பு உன் வேலினும் மிக்க படைக்கலம் இன்று - பிரகாசம் உடைய (பம்பு = பொலிவு) உன்னுடைய வேலாயுதத்தை விட சிறந்த ஆயுதம் இல்லை

உம்பர் தார்களுள் இந்துளம் ஒப்பதும் இன்று - தேவர் அணியும் மாலைகளுள் (தார்=மாலை) நினது கடப்பமலருக்கு (இந்துளம்=கடப்பம்) இணையானது ஒன்றும் இன்று

அம் பராவு வையங்களுள் நீ அளியால் நம்பு மாமயில் போல்வது இன்றே - அழகு நிறைந்த வாகனங்களுள்ளே (வையம் = வாகனம்/ஊர்தி) நீ அருளோடு (அளி=அருள்/அன்பு) விரும்பும் (நம்பு = விரும்பு என்றும் பொருள்) பெரிய மயில் போன்றது வேறு எதுவும் இல்லை

நயனால் - நீதியால் (அதாவது இங்கு உண்மையால்)

வன்ப தாகையுட் கோழியின் மல்குவதின்
றுன்ப தார்வவு வப்பினு யர்ந்ததுமின்
றென்ப தாரமு தோர்தவ ரென்பவர்பேண்
இன்ப தாமென வேமறை கூறிடுமே

வன் பதாகையுள் கோழியின் மல்குவது இன்று - வலிய கொடிகளுள் நின் கோழிக் கொடியை விடச் சிறந்தது இல்லை

உன் பத ஆர்வ உவப்பின் உயர்ந்ததும் இன்று - உன்னுடைய திருவடி அன்பினால் விளையும் இன்பத்தினும் உயர்ந்த இன்பம் இல்லை 

என்பது  ஆரமுதோர் தவர் என்பவர் பேண் - என்பது அருமையான தேவர்களும் தவசிகளும் (முனிவர்களும்) பேணிக் கொள்ளும்

இன்பது ஆம் எனவே மறை கூறிடுமே - இன்பமாம் என்று வேதம் கூறுமே

ஆக லிற்சுர ராதிபன் மூன்றுடனைந்
தாக வத்தர்க ளோதுக ணம்பணிதே
நீக ளித்தரு ணீட்டெனப் பாடினளே
மோக ழித்தனு பூதிசொன் னோன்முறையீர்

ஆகலிற் அத்தர்கள் ஓது  - ஆதலினால் பெரியவர்கள் கூறும்

சுரராதி  பன் மூன்றுடன் ஐந்தாக கணம் பணி தே- சுரர் முதலான பதிமூன்றுடன் ஐந்து (13+5) ஆகிய பதிணென் கணங்களும் (பதிணென் கணங்கள் ஆவன: அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசிகள், போக பூமியர் என்பன) வணங்கி பணிகின்ற தெய்வம் (தே)

நீ களித்து அருள் நீட்டு எனப் பாடினளே - நீ திருவுளம் மகிழ்ந்து எனக்கு அருள் தருவாயாக என்று சரசுவதி பாடினாள்

மோகு அழித்து அனுபூதி சொன்னோன் முறையீர் - உலக மோகத்தை ஒழித்துக் கந்தர் அனுபூதி பாடிய அருணகிரிநாதரது ஒழுக்கத்தை உடையீர்

முருகனின் சிறப்புகளை எல்லாம் நாமகள் எப்படிப் பாடித் துதித்தாள் என்று இந்த ஆறு பாடல்களில் சுவாமிகள் நமக்கு விளக்கியுள்ளார். சுவாமிகள் அருளிய தௌத்தியம் என்னும் பதிகத்தின் கடைசி வரி "பாமகள் புகழருட் பாத நமஸ்தே". இப்பொழுது, இவ்வரிகளின் ஆழத்தைச் சுவாமிகளின் நூலிலேயே கண்டோம். 

 திருச்சிற்றம்பலம்

Wednesday, 7 October 2020

பாம்பன் சுவாமிகள் பாடல்களில் சொல் விளையாட்டு

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

பாம்பன் சுவாமிகள் பாடல்களில் சொல் விளையாட்டு:

பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பாடல்களில் சொல்நயம் அழகுற அமைந்துள்ளவற்றை  அனைவரும் நன்கு அறிவர். அவற்றில் பல இடங்களில் சொற்களைக் கொண்டு விளையாடும் நயங்களை விரிக்கின் பெருகும் என்பதால், இங்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

1. முதலில் காசியாத்திரை நூலில் அமைந்துள்ள ஒரு கண்ணி

 பாசிவா பாசிவா வென்றியமன் பற்றவரிற்
காசிவா காசிவா வென்பேன் பரஞ்சோதீ

 இந்தப் பாடலின் பொருளறிய முதலில் சீர் பிரித்துக் கொள்வோம்:

 பாசி வா பாசி வா என்று இயமன் பற்றவரின்
கா சிவா கா சிவா என்பேன் பரஞ்சோதீ

 இதன் பொருள்:

பாசி வா! பாசி வா - பாசமுடையவனே வா! பாசமுடையவனே வா!

என்று இயமன் - என்று எமன் கூறி

பற்றவரின் - (என்னை) பற்ற வந்தால்

கா சிவா கா சிவா - காப்பாற்று சிவனே! காப்பாற்று சிவனே​

என்பேன் பரஞ்சோதீ  - என்று சொல்வேன் பரஞ்சோதீ

 இவ்வாறு பாசிவா, காசிவா என்ற சொற்களைக் கொண்டு பொருள் பொதிந்த பாடல் வெண்தளையால் வந்த கண்ணி வகையில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும்.

2.  இரண்டாவதாக, திருக்கந்தர் திருப்பல்லாண்டு என்னும் பதிகத்தின் இரண்டாம் பாடலில் மூப்பு என்ற சொல்லை இரு வேறு பொருள்களில் பலமுறை பயன்படுத்தி உள்ளதைக் காணலாம்.

 மூப்பறு கட்டி ளமைத்திரு மேனியு மூப்புடை யார்க்கெல்லாம்
மூப்புடை மேன்மையும் மூப்புடை யாவிகண் முழுவது மூப்பிளமை
யாப்பறு மாறெமை யாள்கும ராவென நாடிறை மையுமல்கு
பாப்பணை யான்மரு மானெனும் வேலற்குப் பல்லாண்டு கூறுதுமே

 இந்த பாடலில் மூப்பு என்ற சொல்லை முதுமை என்ற பொருளிலும் தலைமை என்ற பொருளிலும் சுவாமிகள் அமைத்து உள்ளார்.

 மூப்புஅறு கட்டு இளைமைத் திருமேனியும் - (முருகப் பெருமான்) முதுமை இல்லாது என்றும் இளமையுடன் விளங்கும் திருமேனியும்;

மூப்புடையார்க்கு எல்லாம் மூப்புடை மேன்மையும் - இங்கு மூப்பு என்ற சொல் தலைமை என்ற பொருளில் வந்துள்ளது. அதாவது தலைமை பண்பு உடையவர்களுக்கு எல்லாம் தலைமை உடைய மேன்மை உள்ளவன் முருகன் என்று சுவாமிகள் கூறுகிறார். "நாயகம் ஆனார்க்கு எல்லாம் நாயகம் ஆனாய் போற்றி" என்று போற்றி விண்ணப்பத்தில் சுவாமிகள் பாடியதையும் ஈண்டு கருத்தில் கொள்க.

மூப்புடை ஆவிகள் முழுவதும் மூப்பு இளமை யாப்பு அறுமாறு எனை ஆள் குமரா என - மூப்புடை ஆவிகள் என்றால் முதுமையான உயிர்கள் என்று பொருள்படும். சைவ சித்தாந்த கொள்கையின் படி, கடவுள் என்று உள்ளாரோ அன்றே உயிர்களும் உள்ளன. "என்று நீ (கடவுள்அன்று நான்(உயிர்)" என்று தாயுமான சுவாமிகளும் கூறியுள்ளார். அதனால் தான் சுவாமிகள் இங்கு உயிர்களைக் குறிக்கும் போது, பழைமையான உயிர்கள் என்று கூறுகிறார்‌. இந்த உயிர்கள் இளமையும் முதுமையும் மாறிமாறி வரும் கட்டு (யாப்பு=கட்டு) உடையன. இந்த கட்டினை அறுக்க உயிர்கள்  "குமரா என்னை ஆள்" என்று ஓலம் இட்டு

நாடு இறைமையும் மல்கு - (கட்டிலிருந்து விடுபட விரும்பும் உயிர்கள்) நாடி விரும்புகின்ற தெய்வத்தன்மை மிகுந்து உள்ள

பாப்பணையான் மருமான் எனும் வேலற்கு - பாப்பு=பாம்பு; பாம்பு அணையை உடைய திருமாலின் மருகனான வேலவர்க்கு;

பல்லாண்டு கூறுதுமே - பல்லாண்டு கூறுவோமாக!

 இந்த பாடலில் மூப்பு என்ற சொல் பலமுறை பயின்று வந்து ஆழமான பொருள் பயந்ததை அறிந்தோம்.

 இதுபோன்று பலபல பாடல்களில் சுவாமிகள் புதிய சொற்களைக் கொண்டு விளையாடியும் அதே நேரத்தில் ஆழமான பொருளினை விளக்கியும் உள்ளார்கள்.

 இங்கு பாம்பன் சுவாமிகளின் பாக்கடலில் இருந்து ஒரு சிறுதுளியினை மட்டுமே அடியேனின் சிற்றவிற்கு எட்டியவரை தெளித்து உள்ளேன்! குறைகள் இருப்பின் அடியார் பெருமக்கள் மன்னித்து அருளவும்.

 குருவருள் வாழ்க!!!

திருச்சிற்றம்பலம்

Friday, 11 September 2020

மரங்கள்(அசோக மரங்கள்)செய்யும் மாயவித்தை:

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

பாம்பன் சுவாமிகள் அருளிய அசோக சால வாசத்தில் தலைவி தோழியிடம் "இந்த வசந்த காலத்தில், நாம் எங்கு சென்று வரலாம்" என்று கேட்டாள். அதற்கு தோழி "அசோக மரங்கள் நிறைந்த இடத்திற்கு சென்று வரலாம்" என்று நேரடியாக பதில் கூறாமல் அசோக மரத்தின் தன்மையைக் கூறி பதில் அளிக்கும் நயத்தினைச் சுவாமிகள் அழகுற அமைந்துள்ளார்.

அசோக மரங்கள், வேரின் வழியே பெற்ற நீரினை எல்லாம் உட் கொண்டு தன்னுடைய கிளை, இலை, பூ போன்ற உறுப்புகள் தோறும் நிறமாக காட்டும். இச் செய்கை எது போன்றது என்றால், மாய வித்தை (கண்கட்டி வித்தை) செய்பவர்கள் ஒரு பொருளை ஒரு‌ இடத்தில் புதைத்து விட்டு அதனை வேறொர் இடத்தில் எடுத்து காட்டும் இயல்பை போன்றதாகும். 

இவ்வாறு அசோக மரங்கள் மாய ஜாலம் காட்டுபவர்களின் இயல்பைக் பெற்று உள்ளன என்று சுவாமிகள் பாடியுள்ளார்.

மூலவாய் வழிப்பருகு அறலினைத் துவர் முதிர்ந்து
கோலம் ஆர் சினைதொறும் நிறம் காட்டலில் குறையாச்
சாலம் வல்லவர் இயல்கொள் அசோக அம் சாலப்
பால் அடைந்து இவண் வரல் நலம்எனச் சகி பகர்ந்தாள்

மூலவாய் வழி - மரத்தின் மூலம் என்பது வேர் ஆகும். வாய் என்பது இடத்தைக் குறிக்கும். வேர் என்ற இடத்தில்

பருகு அறலினை - பருகிய நீரினை (அறல்= நீர்)

துவர் முதிர்ந்து - முழுதும் முதிர்ந்து (துவர்=முழுதும்)

கோலம் ஆர் - அழகு நிறைந்த

சினை தொறும் - கிளை, இலை, பூ போன்ற உறுப்புகள் தோறும் (சினை= உறுப்பு)

நிறம் காட்டலில் குறையா - நிறங்களை காட்டுவதில் குறைவு இல்லாத

சாலம் வல்லவர் - ஜாலம் (மாயா ஜாலம்) செய்வதில் திறமை கொண்டவர்

இயல் கொள் அசோக அம் சாலப் பால் - இயல்பை உடைய அசோக மரங்கள் நிறைந்த அழகிய இடத்தை

அடைந்து இவண் வரல் - அடைந்து மீண்டும் இவ்விடம் (இவண்- இவ்விடம்) வருதல்

நலம் என சகி பகர்ந்தாள் - நல்லது என்று தோழி கூறினாள்.

சுவாமிகள் விவரிக்கும் இந்த கவிச்சுவையை படிக்கும் போது நம் சோகமும் மறைந்து அசோகம் ஆகும்.

திருச்சிற்றம்பலம்


Thursday, 27 August 2020

பாம்பன் சுவாமிகளைப் பற்றித் தேவநேய பாவாணர்

 ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

ஞான ஞாயிறு பாம்பன் சுவாமிகளைப் பற்றி மொழி ஞாயிறு தேவ நேய பாவாணர் கூறியதைப் பற்றிப் பார்க்கலாம்:

மொழி ஞாயிறு என்று போற்றப்படும் தேவ நேய பாவாணர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியர் வ. சுப்பிரமணிய பிள்ளைக்கு 17.08.1971 அன்று எழுதிய கடிதத்தில் உள்ள வரிகள்:

“பாம்பன் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் எழுதிய ‘சேந்தன் செந்தமிழ்’ பார்க்கவில்லை. 1906இல் நான் நாலாட்டைச் சிறுவனாயிருந்த போதும் அடிகட்குப் பத்தாண்டு முன்பும் அவர்கள் தனித்தமிழ்க்காப்பு நூல் முதன்முதலாக எழுதினார்களென்பது  மிக மிக மெச்சத்தக்கதே. உடனே ஒரு படி வாங்கி அனுப்புக. தமிழர் வரலாற்றில் அவர்களைப் பாராட்ட வேண்டும். தமிழ் வரலாறு அச்சிட்டபோது தாங்கள் இச்செய்தியைத் தெரிவிக்க வில்லையே” (17.8.71  வ.சு.)

இந்த கடிதத்தில் நாலாட்டை என்பது நான்கு வயது என்றும்; அடிகட்கு பத்தாண்டு முன்பு என்பது மறைமலை அடிகளை குறித்தது. அதாவது மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கம் தொடங்கியது 1916. சுவாமிகள் சேந்தன் செந்தமிழ் அருளியது 1906. அதனால் தான் அடிகட்கு (மறைமலை அடிகளுக்கு) பத்தாண்டு முன்பும் என்று கூறிப்பிட்டு உள்ளார்.

திருச்சிற்றம்பலம்

Sunday, 26 July 2020

முருகு கிளர் ஆரூரரைப் பற்றிப் பாம்பன் சுவாமிகள்:

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

ஆதரம் பயில் ஆருரர் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் திருமுறைகளையும் அருள்பேறுகளையும் எண்ணி எண்ணி பாம்பன் சுவாமிகள் மனம் நெகிழ்ந்துள்ளார் என்பதை நம்மால் அறிய முடிகிறது. சுந்தர மூர்த்தி சுவாமிகளின் குருபூசைத் திருநாளை ஒட்டி (27.07.2020) இங்கு சிலவற்றினைக் காண்போம்:

பாம்பன் சுவாமிகள் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் பெயரைக் குறிப்பிடும் போது "முருகு கிளர் ஆரூரர்", "அழகுடையான்", "சுடர்‌ பரவைக்கு இனியார்" என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

பாம்பன் சுவாமிகள் திருவொற்றியூரில் நடைபெறும் மகிழ மரத்தடி சேவையில் கலந்துக் கொண்டு வழிபட்ட குறிப்பு அவர் தம் வரலாற்று நூலிலும் காணலாம்.

சுந்தர மூர்த்தி சுவாமிகளின்‌ தலையில் சிவபெருமான் சேவடிகளை வைத்தது போல் தன் தலை மேலும் அந்த சேவடி என்கின்ற பூவைச் சூட்ட  வேண்டும் என்று பாடியுள்ள பாடல்:

"சுந்தரத்தின் முடியிலடி சூட்டியாட் கொண்டதுபோல்
என்றனுக்குஞ் சேவடிப்பூ விரண்டினையுஞ் சூட்டாயோ
"

முத்தி நிலைகளைப் பற்றி பாம்பன் சுவாமிகள் பேசும் போது, தூல உடம்புடனே முத்தி அடைவது  உண்டு என்பதை சுவாமிகள் சுந்தரரையும் சேரமான் பெருமானையும் வைத்து விளக்குகின்றார்.

"-----------------------------------சுந்தரர் சேரலன் தூலமுடன்
கயிலாயஞ் சேர்ந்தது போல்நனி சேர்வதும் காசில்அருள்
செயலாளர் சேர்முத்தி என்னலாம் ஓம் சிவ தேசிகனே
"

சமுதாயத்தில் என்றும் உள்ள பிரச்சனை குலம் தாழ்த்தி உயர்த்தி பேசுதல் என்பது தான். இந்த பிரச்சனையைப் பற்றி சுவாமிகள் பேசும் இடத்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையை வைத்து தீர்வு கூறிய முறையைச் சிந்திப்போம்:

வடமொழியில் உள்ள நான்கு வேதங்களையும் படித்து உணர்வதற்கு இழிவான மரபினர் என்று கூறப்படுபவர்களுக்கு உரிமை இல்லை என்று கூறுவதைச் சுவாமிகள் மடமை என்று குறிப்பிடுகிறார்.

துன்பங்களைத் தகர்க்கவல்ல பத்திநெறியையும் ஞான நெறியையும் விரித்துக் கூறும் இனிய தமிழ் நூல்களும் பாடல்களும் இவர்களுக்கு இல்லையோ? என்று சுவாமிகள் வினவுகின்றார். ஒளிப் பொருந்திய பரவை நாச்சியாருக்கு இனியவரான சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்படும் மெய்யடியார்கள் எந்த குலம்? என்று சுவாமிகள் வினவுகின்றார்.

குல பேதம் பேசும் அறியாமைகளை விலக்கி அறிவால் உய்த்து உணர்வீர் என்று சொல்லும் மேலான அறிஞர்கள் போற்றி துதிக்கும் பெரிய குமரன் என்னை ஆட்கொண்டு அருள்வான் என்று பாடியுள்ளார். அந்தச் சந்த மிகுந்த திருப்பாடல்:

தனதன தத்ததனா தனதன தத்ததனா
    தனதன தத்ததனா தனதன தத்ததனா


வடமொழி யிற்சதுமா மறைபயி றற்கிழிவா
    மரபுளர் கட்கதிகா ரமிலையெ னச்சொலினூம்
இடரறு பத்திமைஞா னமிவைகள் சொற்றிடுநூ
    லினியத மிழ்க்கவியா திகளில வர்க்கிலையோ
சுடர்பர வைக்கினியா ரடியவர் மெய்ப்பெயரே
     சொனபதி கத்திடையே யுளர்குல மெக்குலமா
மடமதொ ழித்துணர்வா லுணர்திரெ னச்சொலுமேன்
    மதியர்ப ழிச்சுமகா குமரனெ னைக்கொளுமே


சுந்தரரின் பதிக அமைப்பில் மனந் தோய்ந்த சுவாமிகள் அதுபோன்றே சில  பதிகங்களை அமைத்து ஆறுமுக சிவனாருக்கு மாலையாகச் சூட்டியுள்ளார்.

சுந்தர மூர்த்தி சுவாமிகளின் மற்றுப் பற்று எனக்கு இன்றி... என்ற பதிகத்தில் பாடல் தோறும் நான் மறக்கினும் சொல்லும் நா நமச் சிவாயவே என்று பாடிய படியே திருவலங்கற்றிரட்டில் திருச்சீரலைவாய் பதிகத்தில் பாம்பன் சுவாமிகள் "சாற்றிடும் நா சரவண பவவே" என்று பாடியுள்ளார்.
சுந்தரரின் இந்த பதிகத்திலேயே, இறைவனை எண்ணாத நாள்களை "அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள்", "மறந்திட்ட நாள்", "ஓவு நாள்", "உணர்வு அழியும் நாள்", "உயர் பாடை மேல் காவு நாள்" என்று நாள்களை பட்டியல் இட்டது போல்  பாம்பன் சுவாமிகள் ஒரு முழுபதிகத்திலும் நாள் என்ற  சொல் 60 முறை ஒலிக்கும் படி நாளறுபது என்று ஆறாவது மண்டலத்தில் பாடியுள்ளார்.
சுந்தர மூர்த்தி சுவாமிகள் தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே என்ற பதிகத்தில் என்னே என்னே என்று அடுக்கிக் கொண்டே செல்வார்:

தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
    சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே
அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே
    அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே
மலைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
    வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை
    அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனேே


சுவாமிகளும் இது போன்றே என்ன என்ன என்று ஒரு பாடல் பாடியுள்ளார்

கங்கையென் சுதனே யென்னக்
    கார்த்திகை மதலா யென்னச்
சங்கரி  மகனே யென்னச்
    சங்கரன் குருவே யென்ன
மங்கைய ரிருவோ ருந்தூ
    மணத்திருத் தலைவா வென்னப்
புங்கவர் பரமா வென்னப்
      பொலிசிவ னடிபோற் றுவலே


சுவாமிகள் இது போன்று அருளாளர்களின் பாடல்களில் மனம் தோய்ந்தும் பாடி இருக்கலாம் அல்லது முருகனின் அருளால் அவரை அறியாமலேயும் பாடி இருக்கலாம். ஏனென்றால் குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி என்ற நூலில், மக்களில் சிறந்துள்ளோர் (மகான்களின்) கருத்துகள்/சொற்கள் தன்னுடைய பாடல்களில் தன்னை அறியாமலேயே அமைந்து உள்ளதாக கூறி உள்ளார்.

"மக்களிற் சிறந்துளோர் வழங்கியுள்ள சொற்கள் என்
தொக்க நூல்உள் நான் அறிந்திடா வணம் தொடர்ந்தது அரோ
"

*தொக்க நூல்- நூல் தொகுதி (ஆறு மண்டல நூல்கள்)

இங்கு அடியேன் சிலவற்றை மட்டுமே பதிவிட்டு உள்ளேன். ஆழ்ந்து நோக்கினால் இன்னும் பல குறிப்புகள் காணக் கிடைக்கும் என்று கூறி இவ்வளவில் முடிக்கின்றேன்.

திருச்சிற்றம்பலம்

Tuesday, 21 July 2020

ஆடிப்பூரம் - பாம்பன் சுவாமிகள் கல்லாடைப் பெற்ற நன்நாள்:

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள், மயூரநாதனின் திருவருளால், கல்லாடை (காவி உடை) பெற்ற நாள் ஆடி மாதம் பூர நட்சத்திர நன்னாளாகும். 

பாம்பன் சுவாமிகள் பிரப்பன் வலசையில் குமார பரமேஸ்வரனிடம் உபதேசம் பெற்ற நாள் முதல், வெண்ணிறத்த கோவணம் அணிந்து, வெள்ளை ஆடை ஒன்றையே உடம்பில் போர்த்துக் கொண்டு வாழ்ந்தார்.

காசி நகரில் குமரகுருபர சுவாமிகள் அமைத்த பெருமை பொருந்திய மடத்தில் பச்சைப் பயிறும் பச்சரிசியும் கலந்த நல்ல அமுதத்தையும் பாலையும் உண்டபிறகு மேலே போர்த்துக் கொள்ளும் ஒரு வெள்ளாடை வைத்த இடத்தில் இல்லாமை கண்டு சுவாமிகள் சிந்தித்து நின்றபோது, குமார பரமேசுவரனின் அடியவராய முதிய துறவியொருவர் (அங்கிருந்த தம்பிரான் சுவாமிகள்) பொன்னூலிடப்பட்ட சிறந்த இரண்டு புதிய கல்லாடைகளைக் கொண்டு வந்து சுவாமிகள் அரையில் ஒன்றைச் சுற்றியாத்து ஒன்றைக் கழுத்தில் இட்டு வணங்கி நின்றனர்.
இந்த வரலாற்று நிகழ்ச்சியை பாம்பன் சுவாமிகளின் காசியாத்திரை நூலில் பதிவு செய்து உள்ளார்.

கட்டளைக் கலித்துறை 

1. காசிக் குமர குருபரன் செய்த கனமடத்திற்
பாசிப் பயறு கலந்தநல் லன்னமும் பாலுமுண்டங்
கேசற்று நின்ற வெனதரை யிற்கும ரேசனன்பர்
தூசிற் சிறந்தபொற் *காடாய வத்திரஞ் சுற்றினரே

விளக்கம்: காசி நகரில் குமரகுருபர சுவாமிகள் அமைத்த பெருமை பொருந்திய மடத்தில் பச்சைப் பயிறும் பச்சரிசியும் கலந்த நல்ல அமுதத்தையும் பாலையும் உண்டபிறகு மேலே போர்த்துக் கொள்ளும் ஒரு வெள்ளாடை வைத்த இடத்தில் இல்லாமை கண்டு நான் சிந்தித்து நின்றபோது, குமார பரமேசுவரனின் அடியவராய முதிய துறவியொருவர் பொன்னூலிடப்பட்ட சிறந்த இரண்டு புதிய கல்லாடைகளைக் கொடுவந்து என் அரையில் ஒன்றைச் சுற்றியாத்து ஒன்றைக் கழுத்தில் இட்டு வணங்கி நின்றனர்.


*இக்காடாயங் கட்டியகாலம், கலியுகம் 5004இல் நிகழ் சுபகிருது வருடம் ஆடிமாதம் 22ஆம் தேதி புதவாரம் பூர நக்ஷத்திரம் என்க. (6-8-1902).

2. சுற்று மமையங் குமர குருபர சாமிசொந்த
முற்ற மடமிதிங் கேயிட்ட காவி யுடையிரண்டும்
பெற்றிட னின்கட னாகுங் குமர குருப்பெயரே
பெற்ற சுவாமி யெனவுரைத் தாரந்தப் பேரன்பரே.

விளக்கம்: அங்ஙனம் (அவர் செயலைக்கண்டு இஃதென்னை என்று யான் வினவியிடலும்) பேரன்பு கொண்ட அவர் இது குமர குருபர சுவாமிகள் செய்த மடமாகும். இங்கு இட்ட கல்லாடை இரண்டனையும் பெற்றுக் கொள்ளல் நுமது கடனாகும். குமர குருபர சுவாமிகள் பெயரையே பூண்டுள்ள சுவாமீ! என்று உரைத்து நின்றார்.

3. பின்னு மெனையிங் கறியா தெழுந்ததிப் பெற்றியிதை
நன்ன ரிலையெனத் தள்ளே லெனவு நவின்றவன்னார்
சொன்ன மொழியைக் குமர குருபரன் சொல்லெனவே
யென்ன திதயமு மொப்பிப் பரவச மெய்தியதே.

விளக்கம்: மேலும் அவர் யான் செய்த இச்செயல் என்னை அறியாமலே நிகழ்ந்ததாகும். இது நன்றன்று என்று தள்ளுதல் வேண்டாம் எனவும் கூறிய மொழிகளைக் குமரகுருபரனே அருளிச் செய்தது என்று எனது உள்ளமும் ஒப்பிப் பெருங்களிப்பு அடைந்தது.


4. அன்றிறை கோவணங் கட்டிவந் தெற்குய ராக்கஞ்சொலிச்
சென்றநா டொட்டுவெண் கோவணங்கொண்டு சிவப்பிறுணி
யொன்றையே போர்த்துத் திரிந்தவெற் கிச்செவ் வுடையிரண்டு
நன்றெனத் தந்தசெவ் வேளருள் பூர்த்தியு நல்குகவே.

விளக்கம்: பிரப்பன்வலசை நன்காட்டில் நான் தவமிருந்த ஞான்று கோவணம் அணிந்து வெளிப்பட்டு எனக்கு உயர்ந்த ஒரு மொழியை முருகன் அருளிச் சென்ற நாள் முதல் வெண்ணிறத்த கோவணம் அணிந்து சிவந்த நிற மில்லாத (வெள்ளை) ஆடை ஒன்றையே உடம்பில் போர்த்துத் திரிந்த எனக்கு இந்த இருகல்லாடையும் நறியவாம் என்று வழங்கி யருளிய செவ்வேட் பரமன் திருவருள் நிறைவையும் வழங்கி யருள்வானாக.





இந்த மடம் காசியில் உள்ள கேதாரக் கட்டத்தில் ஸ்ரீ குமாரசுவாமி மடம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த அருள்நிகழ்ச்சியின் நினைவைப் போற்றும் விதமாக, பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படமும் இந்த நான்கு பாடல்கள் பொறித்த பதிவுக் கல்லையும் இன்றும் காணலாம்.



குருவருள் வாழ்க!

Saturday, 11 July 2020

அருணகிரிநாதரைப் பற்றிய பாரதியின் வரிகள்

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

சந்தமுனி அருணகிரி நாதர் பற்றி மகாகவி பாரதியாரின் வரிகள்:

"சந்தக் கணக்கை வைத்துக் கொண்டு, தெளிவாகவும் இயற்கையாகவும் சொல்லுதல் மிகவும் அருமை. காலிலும் கையிலும் தளைகளைப் பூட்டிக்கொண்டு கூத்தாட முடியாதென்று பழமொழி சொல்வார்கள். இந்த மகானுடைய (அருணகிரி நாதர்) கவிதையோ என்றால் மிகவும் கடினமான தளைகளைப் பூட்டிக்கொண்டு தெய்வீக கூத்தாடுகிறது"

நூல் குறிப்பு

நூலின் பெயர்: பாரதி புதையல் பெருந்திரட்டு, (அருணகிரியின் கவிதை) 
வெளியீட்டாளர்: திரு. ரா.அ. பத்மநாதன் 
பக்கம்: 280

இதே போன்று பாம்பன் சுவாமிகளும் அவருடைய சந்தகவிகள் எத்தகையது என்பதைத் தம்முடைய திருப்பா நூலில் கீழ்வருமாறு கூறுகின்றார்:

உயிரோடும் உயிர் மெய்யோடும் அணை குறிலுக்கு குறிலும், நெடிலுக்கு நெடிலும், வல்ஒற்றுக்கு வல்ஒற்றும், மெல்ஒற்றுக்கு மெல்ஒற்றும், இடைஒற்றுக்குக் இடைஒற்றும் எதுகை மோனையோடும் கூடிய நால் அடியும் அளவாகப் பொருந்த எழுவாய் பயனிலை ஏய வண்ணக் குழிப்புடைப் பாட்டுப் பாடுதல், கால்களில் தளை பூட்டிக் கொண்டு மேள தாளங்கட்கு இயைய நடிப்பது ஒக்கும் ஆகலின் எளிது அன்று என்பதும் ஈங்குக் கருதிக் கோடற் பாற்றே

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தெய்வீக கவிகளைக் கற்றலும் கேட்டலும் இனிதே!!!

திருச்சிற்றம்பலம்!!

Wednesday, 1 July 2020

அருணகிரிநாதர் புகழாரங்கள்


ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

அருணகிரிநாதர் புகழாரங்கள்:

பாம்பன் சுவாமிகள் பதிகங்கள் தோறும் அருணகிரிநாதரைப் பாடியே பதிகங்களை நிறைவு செய்யும் நியமம் பூண்டு ஒழுகினார்‌ என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பதிவில் பாம்பன் சுவாமிகள் அருளிய முதல்  மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு பதிகங்களிலும் சுவாமிகள் அருணகிரிநாதரை எப்படி எல்லாம் புகழ்ந்து உள்ளார் என்பதைப் பதிக வரிசையில் காணலாம்.

  • 1. அமரர்கோ -- அருணகிரிநாதன்
  • 2. திருப்பரங்கிரி -- தெள்ளறிஞன் அருணகிரி  
  • 3. திருச்செந்தில் -- அருள் அருணகிரி
  • 4. திருப்பழநி -- உரன் அருணகிரி
  • 5. திருவேரகம் -- அருணகிரிமுனி
  • 6. திருக்குன்றுதோறாடல் -- திருஅருணகிரி
  • 7. திருச்சோலைமலை -- சந்தமுனி எந்தை
  • 8.  திருவிராமேச்சுரம்-- தகை கொண்ட அருணகிரியார், நிஜ அருணை முனிவன்
  • 9. திருப்புலியூர் -- அருணகிரி
  • 10.திருவருணை -- மதர்  அருணகிரி
  • 11.திருக்குமரக்கோட்டம் --  ஓகை கூர் அருணகிரி
  • 12.திருத்தணிகை - அருணகிரி
  • 13. திருமலை -- அருணகிரி
  • 14. திருக்கயிலாசமலை -- தெருள் அருணகிரிநாதன்
  • 15. சண்முகானந்தசிவம் -- சோண சயில நாமத்தன்
  • 16. நிட்களானந்தகுகன் -- நிறை கருணை அருணகிரி
  • 17. சரவணபவானந்தன் -- அருணகிரி எந்தை
  • 18. ஆனந்தமுகில் -- புகழ் படித்த கோன்
  • 19. குகப்பிரமம் -- அருணகிரி 
  • 20. பூரணானந்த குகன் -- கருணை பெருகு அருணகிரி
  • 21. குந்துகால் -- தப்பாது துன்பற்று இமிழ் பாவினம் சொற்ற தக்கோன்
  • 22. கதிரேசன் -- கஞ்ச வீ அடியின் அருளில் நின்று புகழ் கழறினோர்
  • 23. சரவணபவன் -- அருணகிரி
  • 24. நவரத்தின மீக்கூற்று -- சிறுமை இ(ல்)லா இன்ப அருணகிரி
  • 25. உட்பகை ஒழிக்க மனு -- 
  • 26. பெரும்பேறு -- 
  • 27. உள்ளூர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் -- திரு உளத்திற்கு இனிய அருணகிரி, எரி நிரய யாதனையை நூறு அருணகிரி
  • 28. வேண்டுகோள் -- அருணகிரி
  • 29. பொன்னவிர் மேனி -- செய்ய தீ வரைப் பேர் எந்தை
  • 30. கருணாகரவேலன் -- திருப்புகழ் செப்பிய என்னை ஆள் உடையான்
  • 31. சிகிவாகனன் -- வன்னி சிலைப் பெயரோன்
  • 32. அயிலரசு - அருளால் தண் அம் தமிழ் அனுபூதி அறைந்தோன்
  • 33. கந்தர் இரட்டை மணிமாலை -- கந்தர் அனுபூதி அத்தன்
  • 34. கந்தர் ஒருபா ஒருபஃது -- சண்முக நிச்சயம் ஓர்ந்து திருப்புகழ் சாற்றினவன்
  • 35. மனது -- தெருள் ஆர் அருணகிரி
  • 36. எழிலார் சுரும்பு -- அருணகிரியார்
  • 37. திருநிறைந்த சிவம் -- அருணைப் பெயரான்
  • 38. இந்துமிலைந்தோன் -- பாட்டில் புகழ் அருணைப் பெயரோர்
  • 39. கந்தர் திருவாரம் -- ஏர் கிளர் ஒள் அருணைப்  பேரன்
  • 40. அவனியாசை -- அணாமலை பேருடையான்
  • 41. பகலெல்லாம் -- கந்தர் அலங்காரம் சொன்னோன்
  • 42. கங்கையின் சேய் -- வேத வழி நின்றுள சந்த மாமுனி
  • 43. மண்ணிற் சிறுவீடு -- அருணைப் புதன்
  • 44. புவியாரே -- எஞ்சா அருணைப் பதி இருந்த எந்தை அருணகிரி
  • 45. சொன்னயம் -- அப்பன் நல் அருணகிரி
  • 46. கந்தர் நான்மணி மாலை -- இன்புகழ் முனி
  • 47. நெஞ்சுப்பத்து -- அம் சொல் நயம் விஞ்சிய அருள் புகழ்கள் அந்நாள் நெஞ்சுருக ஓதினவன்
  • 48. உலகவாழ்வு -- அருணை நாதன்
  • 49. ஞாயவாதிகள் விளக்குவர் -- இன்பு அடைந்த அருணகிரி
  • 50. போற்றி விண்ணப்பம் -- தீ அரிப் பெயரோர்
  • 51. சரண விண்ணப்பம் -- எம்மான் அற்புத அருணைப் பேரான்
  • 52. அமிர்தமதி -- அருள் கடல் அருணையான்
  • 53. சிறுமை நீக்குயர் செல்வம் -- ஓது செந்தமிழால் நிரம்பு அனு​பூதி சொன்னவன்
  • 54. துறுவுநோக்கம் -- வெள் ஏனம் தெரிவரு மலைப் பேர் முநி
  • 55. பிழைபொறுக்க முறையீடு -- மாசில் நல் அருணாசலத்தவன் 
  • 56. உள்ளக்களி -- விந்தை மிக உள அருணகிரி
  • 57. திருவுயர்ந்த ஆறெழுத்தான் -- புந்தி நிறைவு உடை அருணகிரி
  • 58. அடியவர்க்கடிமை நாம் -- கொடுநிழல் அவிய வந்தகுறை ஓவ இன்பு குறையாத பேறும் உறவே வடுவு அறு கவிகள் சொன்ன அருணகிரி
  • 59. ஆரணத்திறுதி -- அருணையன்
  • 60. சிவலோக சுந்தரமாலை -- சுமதி உடை அருணகிரி
  • 61. பணம் -- புகழ் குயின்றோன்
  • 62. அபிமானமறுத்தல் -- அருணகிரி
  • 63. மறைமுடிவு -- பூச் சனிப்பு இலா அருணகிரி
  • 64. ஏம விலேகர் -- பரஞ்சுடர் ஓதிப் பேர் திருவாளன்
  • 65. ஶ்ரீ கதிர்காமவேலர் வண்ணம் - அனுபூதி மாமுனி
  • 66. பங்கிகள் -- மதி ஒலியான்
  • 67. பரஞ்சுடர்க்கண்ணி -- அருணை நாதர்
  • 68. பொன்மயிற்கண்ணி -- இன்ப கடல் படிந்த எந்தை அருணகிரி
  • 69. குருபரக்கண்ணி -- அண்ணல் அருணகிரி
  • 70. சதாசிவக்கண்ணி -- எம்மான் அருணகிரி
  • 71. தேந்தேனேயென் கண்ணி -- அருணகிரி நாதன்
  • 72. பரம்பொருட் கண்ணி -- சொல்லேறு அரும் புகழ்கள் சொன்ன பெரியோன்
  • 73. பூரணக் கண்ணி -- ஈர் எண் சகச்சிர சந்தப்பா இயம்பிய மெய் ஆரியன்
  • 74. திருவுருமலைக் கோமகன் -- சிகிவரை ஒலி முனி
  • 75. ஆனந்தக் களிப்பு -- சீர்மலி ஆனந்த வீட்டின்பத்தைச் சேர்ந்த அண்ணாமலைப் பேர் எந்தை
  • 76. சமாதான சங்கீதம் -- முத்தி தரும் குகப்பிரமத்தை வாழ்த்திய முத்தன் அண்ணாமலையான்

குறிப்பு: ஒரு சில பதிகங்களில் அருணகிரிநாதர் பற்றிய குறிப்பினை எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை அதனால் அந்த பதிகங்களில் பெயருக்கு நேரே ஏதும் குறிப்பிடாமல் விட்டுவிட்டோம்.


படத்தில் உள்ள அருணகிரி நாதர் படிமம் (சிலை), பாம்பன் சுவாமிகளின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டிஸ்வரன் பேட்டையில் உள்ள சிவலாயத்திற்கு சுவாமிகளால் அளிக்கப்பட்டது. இன்றும் இக்கோயிலில் உள்ள முருகப் பெருமான் சன்னிதியில் இப்படிமத்தை நாம் காணலாம். ஆண்டு தோறும் பாம்பன் சுவாமி அடியார்களால் அருணகிரி நாதர்  குருபூஜை இக் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த பதிவினை 2020ஆம் ஆண்டு அருணகிரி நாதர் குருபூஜை தினத்தினை (04.07.2020) முன்னிட்டு அருணகிரி நாத ஆனந்த பராபரருக்கு சமர்ப்பிக்கின்றோம். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் சுவாமிகளும் அவர்தம் அடியார்களும் மன்னித்து அருள வேண்டுகின்றோம்.

இந்த குறிப்புகளைத் திரட்டி தொகுத்து அளித்த பாம்பனடியார் திரு. வெங்கடாசலம் அவர்களுக்கு நன்றி!

அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி போற்றி!!!

திருச்சிற்றம்பலம்