Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Monday, 16 November 2020

பாம்பன் சுவாமிகளின் பாதம் பட்டால்...

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

பெரியது என்ன? என்ற கேள்வி எழுந்த போது, கல்வியங் கடலைக் கடந்து மேன் மிளிரும் கருத்துடை ஒளவை மூதாட்டி தொண்டர்களே (இறையடியவரே) பெரியவர்கள் என்று உரைத்தார். இத்திறத்த தொண்டர்களின் காலடிகள் இந்த அடிமையின் தலையில் பட்டால் பிரமலிபி (தலையெழுத்து/தலைவிதி) அழிந்தே விடும் என்கின்றார் பாம்பன் சுவாமிகள். இக்கருத்துகள் ஏதோ மகிமை படுத்துவதற்காக சொல்லப்படுவன அன்று. இது சத்தியமே. இதன் உண்மையை, நாம் அனைவரும் அறிந்த சுவாமிகளின் வரலாற்றின் மூலமாகவே மெய்ப்பிக்கலாம்.

பிரப்பன் வலசை என்னும் ஊரில் உள்ள சுடுகாடு. அங்கே பிணங்களும், பேய்களும், பாம்புகளுமே உண்டு. கோயில் சுடுகாடு என்று திருவாசகம் கூறினாலும் நம்மனோர் செல்ல அஞ்சுகின்ற இடம் சுடுகாடு. சுவாமிகள் தவம் செய்தது சுடுகாடு தான் என்பதைச் சுவாமிகளின் வாக்கினாலேயே அறியலாம். சுவாமிகள் ஈம மா நிலம்​ என்று இந்தச் சுடுகாட்டினைத் தம் பாடலில் கூறிப்பிட்டு உள்ளார்.

சுவாமிகளின் காலடிகள் இந்தச் சுடுகாட்டில் பட்டனதால், சிவனை நிகர் பொதிய வரை முநிவன் என்று அருணகிரிநாதரால் புகழப்பெற்ற அகத்தியப் பெருமானின் சிற்றடிகளும் சுடுகாடாக இருந்த இந்நிலத்தில் பட்டன.

சுவாமிகளின் காலடிகள் இந்தச் சுடுகாட்டில் பட்டனதால், இன்பக்கடல் படிந்த எந்தை அருணகிரி என்று பாம்பன் சுவாமிகளால் புகழப்பெற்ற சந்தமுனிவரின் சீரடிகளும் சுடுகாடாக இருந்த இந்நிலத்தில் பட்டன.

சுவாமிகளின் காலடிகள் இந்தச் சுடுகாட்டில் பட்டனதால், திருமாலும் அயனும் தேடி அறியா திருமுருகனின் திருவடிகள் சுடுகாடாக இருந்த இந்நிலத்தில் தோய்ந்தன.

இந்நிலம் கோயிலும் கண்டது. இன்று தஞ்சம் என்று பல உயிர்கள் வந்து அருள்பெறும் இடமாய் உள்ளது. இங்குள்ள முருகப் பெருமானைப் பற்றிச் சுவாமிகள் பிரப்பன்வலசை பதிகத்தில் கூறும்போது,

தஞ்சம் என நின்றவர்கள் அஞ்சன்மின் எனச் சொல் உரை தந்து அருள்புரி
நம் சிவபிரான் எனும் மயூர
முருகையர்

இதன் பொருள்: நம்முடைய சிவபிரான் ஆகிய மயில் ஊரும் முருகையன், தஞ்சம் என்று நிற்பவர்களுக்கு "அஞ்சற்க" என்ற சொல்லினைக் கூறி அருள்புரிகின்றான்

எனவும், மேலும் ஒரு பாடலில்

உள்ளபடி உன்னுபவர் உள்ளபடி உய்யஎன உன்னு பெரிய
வள்ளல் முருகையர்

இதன் பொருள்: இறைவனை உண்மையாக நினைப்பவர்கள், உண்மையாகவே உய்தி பெற வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு பெரிய வள்ளல் முருகையர்

(உள்ளபடி – உண்மையாக; உன்னுதல் = தியானித்தல்/நினைத்தல்; உய்ய – உய்திபெறல்)

என்று முருகனின் கருணையையும் அருட்கொடையையும் இப்பதிகத்தில் பாடி உள்ளார்.

அருள் வரலாற்றில், ஒரு ஞானியின் காலடிகள் பட்ட இடம் எவ்வளவு சிறப்புகளைப் பெற்றன என்பதை நாம் கண்கூடாகக் காணலாம். பாம்பன் சுவாமிகள் திருவடிகள் பட்டனதால் பேய்கள் நடமாடும் சுடுகாடே , சகல நன்மைகளைத் தரும் கோயிலாக மாறியது என்றால், சுவாமிகளின் திருவடிகளை நம் இதயத்தில் பதிந்தால், பொறாமை, வஞ்சம் முதலான மனத்தில் உள்ள பேய்கள் அழிந்து இறைவன் வாழும் கோயிலாக நம் மனம் மாறும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு: பாம்பன் சுவாமிகளின் கருணையினால், அவர் திருக்காலடிகளின் சிறப்பினைக் கூறி, இந்தக் கோணத்தில் இக்கட்டுரையை எழுத ஆற்றுப்படுத்திய பாம்பன் அடியார் திரு. குருமூர்த்தி அவர்களுக்கு நன்றி!

திருச்சிற்றம்பலம்

Tuesday, 3 November 2020

இதிகாச காட்சியும் பாம்பன் சுவாமிகளின் பதிவும்

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

தகரவெளி இறைவனை உணர்ந்து தகர வித்தையைக் கைவரப் பெற்ற மகான்கள், அனைத்து உயிர்களிலும் இருப்பார்கள்; அனைத்து உயிர்களும் அவருள் கலந்து இருக்கும். இதனைத் தெளிவாக உணர்த்தும் விதமாகப் புராணத்தில் ஒரு காட்சி காணப்படுகின்றது.

வியாசரின் புத்திரர் சுகபிரம்மர். தகர வித்தையை நன்கு கற்றறிந்தவர் இவர் பிறந்ததில் இருந்து தந்தையை விட்டுப் பிரிந்ததில்லை. ஒருநாள், திடீரென காட்டுக்குள் ஓட ஆரம்பித்தார். பின்னால் ஓடிய வியாசர் "மகனே! மகனே' எனக் கூவி அழைத்தார். உடனே அங்கிருந்த மரங்களெல்லாம் "என்ன என்ன' என்று கேட்டதாம். அதாவது சுகபிரம்மர் வேறு, தாங்கள் வேறு அல்ல என்று காட்டிக் கொண்டன. மரங்கள் மட்டுமல்ல, அங்கிருந்த பறவைகள், விலங்குகள், மலைகள், நதிகளும் "என்ன என்ன' என்றனவாம். சுகப்பிரம்மரும் தாங்களும் ஒன்றே என்ற மனநிலையை அவை கொண் டிருந்தன. அதனால், அவரது பிரதிநிதியாக அவை பதிலளித்தன. இந்த உலகிலுள்ள "எல்லாமே அவர்' என்ற வகையில் அவர் மேம்பட்ட நிலையில் இருந்தார். "சர்வபூத ஹ்ருதயர்' என்று அவரை அழைத்தனர். இதுவே தகராலய இரகசிய நிலையும் ஆகும். இதுவே அமல முத்தி நிலை என்று சுவாமிகள் கூறிப்பிடுகின்றார். 

இந்த அற்புத காட்சியைச் சுவாமிகள் முதல் மண்டலத்தைச் சார்ந்த சிவலோக சுந்தர மாலை என்ற பதிகத்தின் 27ஆம் பாடலில் மிகவும் சுருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

தந்தைசுத னேயென்ற தருணமவ ணேனேனென்
றந்தமொடு செடிமரங்க ளதிர்தனவா லமலமுத்தி
பெந்தமிலா நிறைவதனைப் பெற்றவரு மெண்ணிலரே
சிந்தைமகிழ்ந் தருள்வதெந்நாள் சிவலோக சுந்தரனே

இதன் பொருள்:

தந்தை சுதனே என்ற தருணம்: தந்தையாகிய வியாசர் தன் மகன் சுகமுனிவரை மகனே என்று அழைத்த தருணம்

அவண் ஏன் ஏன் என்று அந்தமொடு செடி மரங்கள் அதிர்தனவால் அமல முத்தி: அங்கு (அவண்=அவ்விடம்) இருந்த செடி மரங்கள் முதலான அனைத்தும் என்ன என்ன என்று பதில் சொல்லியன. இதுவே தகராலய நிலை; மலங்கள் இல்லாத முத்தி நிலையுமாம்

பெந்தமிலா நிறைவதனைப் பெற்றவரும் எண்ணிலரே: எந்த வித பந்தமும் பற்றுமற்ற (பெந்தம் - பந்தம்/கட்டு) பூரண நிலையும் இதுவே; இந்த நிலையைப் பெற்ற அருளாளர்களும் எண்ணில் அடங்கார்.

சிந்தை மகிழ்ந்து அருள்வது எந்நாள் சிவலோக சுந்தரனே - இந்த தகராலய நிலையை திருவுளம் மகிழ்ந்து அடியேனுக்கு அருளும் நாள் எந்த நாள்? சிவலோக சுந்தரனே!!!

இது போன்ற புராணக் காட்சிகளைப் பாம்பன் சுவாமிகள் தம்முடைய பாடல்களில் பதிந்து, நம்மனோர் முத்தி நிலையை எளிதில் புரிந்து கொள்ளவும்; அந்நிலையை நாமும் இறைவனிடம் கேட்கும் பொருட்டு அமைத்துள்ள கருணையைப் பல இடங்களிலும் காணலாம்.

குருவருள் வாழ்க!!!

திருச்சிற்றம்பலம்