Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Sunday, 26 July 2020

முருகு கிளர் ஆரூரரைப் பற்றிப் பாம்பன் சுவாமிகள்:

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

ஆதரம் பயில் ஆருரர் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் திருமுறைகளையும் அருள்பேறுகளையும் எண்ணி எண்ணி பாம்பன் சுவாமிகள் மனம் நெகிழ்ந்துள்ளார் என்பதை நம்மால் அறிய முடிகிறது. சுந்தர மூர்த்தி சுவாமிகளின் குருபூசைத் திருநாளை ஒட்டி (27.07.2020) இங்கு சிலவற்றினைக் காண்போம்:

பாம்பன் சுவாமிகள் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் பெயரைக் குறிப்பிடும் போது "முருகு கிளர் ஆரூரர்", "அழகுடையான்", "சுடர்‌ பரவைக்கு இனியார்" என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்.

பாம்பன் சுவாமிகள் திருவொற்றியூரில் நடைபெறும் மகிழ மரத்தடி சேவையில் கலந்துக் கொண்டு வழிபட்ட குறிப்பு அவர் தம் வரலாற்று நூலிலும் காணலாம்.

சுந்தர மூர்த்தி சுவாமிகளின்‌ தலையில் சிவபெருமான் சேவடிகளை வைத்தது போல் தன் தலை மேலும் அந்த சேவடி என்கின்ற பூவைச் சூட்ட  வேண்டும் என்று பாடியுள்ள பாடல்:

"சுந்தரத்தின் முடியிலடி சூட்டியாட் கொண்டதுபோல்
என்றனுக்குஞ் சேவடிப்பூ விரண்டினையுஞ் சூட்டாயோ
"

முத்தி நிலைகளைப் பற்றி பாம்பன் சுவாமிகள் பேசும் போது, தூல உடம்புடனே முத்தி அடைவது  உண்டு என்பதை சுவாமிகள் சுந்தரரையும் சேரமான் பெருமானையும் வைத்து விளக்குகின்றார்.

"-----------------------------------சுந்தரர் சேரலன் தூலமுடன்
கயிலாயஞ் சேர்ந்தது போல்நனி சேர்வதும் காசில்அருள்
செயலாளர் சேர்முத்தி என்னலாம் ஓம் சிவ தேசிகனே
"

சமுதாயத்தில் என்றும் உள்ள பிரச்சனை குலம் தாழ்த்தி உயர்த்தி பேசுதல் என்பது தான். இந்த பிரச்சனையைப் பற்றி சுவாமிகள் பேசும் இடத்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையை வைத்து தீர்வு கூறிய முறையைச் சிந்திப்போம்:

வடமொழியில் உள்ள நான்கு வேதங்களையும் படித்து உணர்வதற்கு இழிவான மரபினர் என்று கூறப்படுபவர்களுக்கு உரிமை இல்லை என்று கூறுவதைச் சுவாமிகள் மடமை என்று குறிப்பிடுகிறார்.

துன்பங்களைத் தகர்க்கவல்ல பத்திநெறியையும் ஞான நெறியையும் விரித்துக் கூறும் இனிய தமிழ் நூல்களும் பாடல்களும் இவர்களுக்கு இல்லையோ? என்று சுவாமிகள் வினவுகின்றார். ஒளிப் பொருந்திய பரவை நாச்சியாருக்கு இனியவரான சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்படும் மெய்யடியார்கள் எந்த குலம்? என்று சுவாமிகள் வினவுகின்றார்.

குல பேதம் பேசும் அறியாமைகளை விலக்கி அறிவால் உய்த்து உணர்வீர் என்று சொல்லும் மேலான அறிஞர்கள் போற்றி துதிக்கும் பெரிய குமரன் என்னை ஆட்கொண்டு அருள்வான் என்று பாடியுள்ளார். அந்தச் சந்த மிகுந்த திருப்பாடல்:

தனதன தத்ததனா தனதன தத்ததனா
    தனதன தத்ததனா தனதன தத்ததனா


வடமொழி யிற்சதுமா மறைபயி றற்கிழிவா
    மரபுளர் கட்கதிகா ரமிலையெ னச்சொலினூம்
இடரறு பத்திமைஞா னமிவைகள் சொற்றிடுநூ
    லினியத மிழ்க்கவியா திகளில வர்க்கிலையோ
சுடர்பர வைக்கினியா ரடியவர் மெய்ப்பெயரே
     சொனபதி கத்திடையே யுளர்குல மெக்குலமா
மடமதொ ழித்துணர்வா லுணர்திரெ னச்சொலுமேன்
    மதியர்ப ழிச்சுமகா குமரனெ னைக்கொளுமே


சுந்தரரின் பதிக அமைப்பில் மனந் தோய்ந்த சுவாமிகள் அதுபோன்றே சில  பதிகங்களை அமைத்து ஆறுமுக சிவனாருக்கு மாலையாகச் சூட்டியுள்ளார்.

சுந்தர மூர்த்தி சுவாமிகளின் மற்றுப் பற்று எனக்கு இன்றி... என்ற பதிகத்தில் பாடல் தோறும் நான் மறக்கினும் சொல்லும் நா நமச் சிவாயவே என்று பாடிய படியே திருவலங்கற்றிரட்டில் திருச்சீரலைவாய் பதிகத்தில் பாம்பன் சுவாமிகள் "சாற்றிடும் நா சரவண பவவே" என்று பாடியுள்ளார்.
சுந்தரரின் இந்த பதிகத்திலேயே, இறைவனை எண்ணாத நாள்களை "அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள்", "மறந்திட்ட நாள்", "ஓவு நாள்", "உணர்வு அழியும் நாள்", "உயர் பாடை மேல் காவு நாள்" என்று நாள்களை பட்டியல் இட்டது போல்  பாம்பன் சுவாமிகள் ஒரு முழுபதிகத்திலும் நாள் என்ற  சொல் 60 முறை ஒலிக்கும் படி நாளறுபது என்று ஆறாவது மண்டலத்தில் பாடியுள்ளார்.
சுந்தர மூர்த்தி சுவாமிகள் தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே என்ற பதிகத்தில் என்னே என்னே என்று அடுக்கிக் கொண்டே செல்வார்:

தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
    சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே
அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே
    அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே
மலைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
    வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை
    அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனேே


சுவாமிகளும் இது போன்றே என்ன என்ன என்று ஒரு பாடல் பாடியுள்ளார்

கங்கையென் சுதனே யென்னக்
    கார்த்திகை மதலா யென்னச்
சங்கரி  மகனே யென்னச்
    சங்கரன் குருவே யென்ன
மங்கைய ரிருவோ ருந்தூ
    மணத்திருத் தலைவா வென்னப்
புங்கவர் பரமா வென்னப்
      பொலிசிவ னடிபோற் றுவலே


சுவாமிகள் இது போன்று அருளாளர்களின் பாடல்களில் மனம் தோய்ந்தும் பாடி இருக்கலாம் அல்லது முருகனின் அருளால் அவரை அறியாமலேயும் பாடி இருக்கலாம். ஏனென்றால் குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி என்ற நூலில், மக்களில் சிறந்துள்ளோர் (மகான்களின்) கருத்துகள்/சொற்கள் தன்னுடைய பாடல்களில் தன்னை அறியாமலேயே அமைந்து உள்ளதாக கூறி உள்ளார்.

"மக்களிற் சிறந்துளோர் வழங்கியுள்ள சொற்கள் என்
தொக்க நூல்உள் நான் அறிந்திடா வணம் தொடர்ந்தது அரோ
"

*தொக்க நூல்- நூல் தொகுதி (ஆறு மண்டல நூல்கள்)

இங்கு அடியேன் சிலவற்றை மட்டுமே பதிவிட்டு உள்ளேன். ஆழ்ந்து நோக்கினால் இன்னும் பல குறிப்புகள் காணக் கிடைக்கும் என்று கூறி இவ்வளவில் முடிக்கின்றேன்.

திருச்சிற்றம்பலம்

Tuesday, 21 July 2020

ஆடிப்பூரம் - பாம்பன் சுவாமிகள் கல்லாடைப் பெற்ற நன்நாள்:

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள், மயூரநாதனின் திருவருளால், கல்லாடை (காவி உடை) பெற்ற நாள் ஆடி மாதம் பூர நட்சத்திர நன்னாளாகும். 

பாம்பன் சுவாமிகள் பிரப்பன் வலசையில் குமார பரமேஸ்வரனிடம் உபதேசம் பெற்ற நாள் முதல், வெண்ணிறத்த கோவணம் அணிந்து, வெள்ளை ஆடை ஒன்றையே உடம்பில் போர்த்துக் கொண்டு வாழ்ந்தார்.

காசி நகரில் குமரகுருபர சுவாமிகள் அமைத்த பெருமை பொருந்திய மடத்தில் பச்சைப் பயிறும் பச்சரிசியும் கலந்த நல்ல அமுதத்தையும் பாலையும் உண்டபிறகு மேலே போர்த்துக் கொள்ளும் ஒரு வெள்ளாடை வைத்த இடத்தில் இல்லாமை கண்டு சுவாமிகள் சிந்தித்து நின்றபோது, குமார பரமேசுவரனின் அடியவராய முதிய துறவியொருவர் (அங்கிருந்த தம்பிரான் சுவாமிகள்) பொன்னூலிடப்பட்ட சிறந்த இரண்டு புதிய கல்லாடைகளைக் கொண்டு வந்து சுவாமிகள் அரையில் ஒன்றைச் சுற்றியாத்து ஒன்றைக் கழுத்தில் இட்டு வணங்கி நின்றனர்.
இந்த வரலாற்று நிகழ்ச்சியை பாம்பன் சுவாமிகளின் காசியாத்திரை நூலில் பதிவு செய்து உள்ளார்.

கட்டளைக் கலித்துறை 

1. காசிக் குமர குருபரன் செய்த கனமடத்திற்
பாசிப் பயறு கலந்தநல் லன்னமும் பாலுமுண்டங்
கேசற்று நின்ற வெனதரை யிற்கும ரேசனன்பர்
தூசிற் சிறந்தபொற் *காடாய வத்திரஞ் சுற்றினரே

விளக்கம்: காசி நகரில் குமரகுருபர சுவாமிகள் அமைத்த பெருமை பொருந்திய மடத்தில் பச்சைப் பயிறும் பச்சரிசியும் கலந்த நல்ல அமுதத்தையும் பாலையும் உண்டபிறகு மேலே போர்த்துக் கொள்ளும் ஒரு வெள்ளாடை வைத்த இடத்தில் இல்லாமை கண்டு நான் சிந்தித்து நின்றபோது, குமார பரமேசுவரனின் அடியவராய முதிய துறவியொருவர் பொன்னூலிடப்பட்ட சிறந்த இரண்டு புதிய கல்லாடைகளைக் கொடுவந்து என் அரையில் ஒன்றைச் சுற்றியாத்து ஒன்றைக் கழுத்தில் இட்டு வணங்கி நின்றனர்.


*இக்காடாயங் கட்டியகாலம், கலியுகம் 5004இல் நிகழ் சுபகிருது வருடம் ஆடிமாதம் 22ஆம் தேதி புதவாரம் பூர நக்ஷத்திரம் என்க. (6-8-1902).

2. சுற்று மமையங் குமர குருபர சாமிசொந்த
முற்ற மடமிதிங் கேயிட்ட காவி யுடையிரண்டும்
பெற்றிட னின்கட னாகுங் குமர குருப்பெயரே
பெற்ற சுவாமி யெனவுரைத் தாரந்தப் பேரன்பரே.

விளக்கம்: அங்ஙனம் (அவர் செயலைக்கண்டு இஃதென்னை என்று யான் வினவியிடலும்) பேரன்பு கொண்ட அவர் இது குமர குருபர சுவாமிகள் செய்த மடமாகும். இங்கு இட்ட கல்லாடை இரண்டனையும் பெற்றுக் கொள்ளல் நுமது கடனாகும். குமர குருபர சுவாமிகள் பெயரையே பூண்டுள்ள சுவாமீ! என்று உரைத்து நின்றார்.

3. பின்னு மெனையிங் கறியா தெழுந்ததிப் பெற்றியிதை
நன்ன ரிலையெனத் தள்ளே லெனவு நவின்றவன்னார்
சொன்ன மொழியைக் குமர குருபரன் சொல்லெனவே
யென்ன திதயமு மொப்பிப் பரவச மெய்தியதே.

விளக்கம்: மேலும் அவர் யான் செய்த இச்செயல் என்னை அறியாமலே நிகழ்ந்ததாகும். இது நன்றன்று என்று தள்ளுதல் வேண்டாம் எனவும் கூறிய மொழிகளைக் குமரகுருபரனே அருளிச் செய்தது என்று எனது உள்ளமும் ஒப்பிப் பெருங்களிப்பு அடைந்தது.


4. அன்றிறை கோவணங் கட்டிவந் தெற்குய ராக்கஞ்சொலிச்
சென்றநா டொட்டுவெண் கோவணங்கொண்டு சிவப்பிறுணி
யொன்றையே போர்த்துத் திரிந்தவெற் கிச்செவ் வுடையிரண்டு
நன்றெனத் தந்தசெவ் வேளருள் பூர்த்தியு நல்குகவே.

விளக்கம்: பிரப்பன்வலசை நன்காட்டில் நான் தவமிருந்த ஞான்று கோவணம் அணிந்து வெளிப்பட்டு எனக்கு உயர்ந்த ஒரு மொழியை முருகன் அருளிச் சென்ற நாள் முதல் வெண்ணிறத்த கோவணம் அணிந்து சிவந்த நிற மில்லாத (வெள்ளை) ஆடை ஒன்றையே உடம்பில் போர்த்துத் திரிந்த எனக்கு இந்த இருகல்லாடையும் நறியவாம் என்று வழங்கி யருளிய செவ்வேட் பரமன் திருவருள் நிறைவையும் வழங்கி யருள்வானாக.





இந்த மடம் காசியில் உள்ள கேதாரக் கட்டத்தில் ஸ்ரீ குமாரசுவாமி மடம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த அருள்நிகழ்ச்சியின் நினைவைப் போற்றும் விதமாக, பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படமும் இந்த நான்கு பாடல்கள் பொறித்த பதிவுக் கல்லையும் இன்றும் காணலாம்.



குருவருள் வாழ்க!

Saturday, 11 July 2020

அருணகிரிநாதரைப் பற்றிய பாரதியின் வரிகள்

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

சந்தமுனி அருணகிரி நாதர் பற்றி மகாகவி பாரதியாரின் வரிகள்:

"சந்தக் கணக்கை வைத்துக் கொண்டு, தெளிவாகவும் இயற்கையாகவும் சொல்லுதல் மிகவும் அருமை. காலிலும் கையிலும் தளைகளைப் பூட்டிக்கொண்டு கூத்தாட முடியாதென்று பழமொழி சொல்வார்கள். இந்த மகானுடைய (அருணகிரி நாதர்) கவிதையோ என்றால் மிகவும் கடினமான தளைகளைப் பூட்டிக்கொண்டு தெய்வீக கூத்தாடுகிறது"

நூல் குறிப்பு

நூலின் பெயர்: பாரதி புதையல் பெருந்திரட்டு, (அருணகிரியின் கவிதை) 
வெளியீட்டாளர்: திரு. ரா.அ. பத்மநாதன் 
பக்கம்: 280

இதே போன்று பாம்பன் சுவாமிகளும் அவருடைய சந்தகவிகள் எத்தகையது என்பதைத் தம்முடைய திருப்பா நூலில் கீழ்வருமாறு கூறுகின்றார்:

உயிரோடும் உயிர் மெய்யோடும் அணை குறிலுக்கு குறிலும், நெடிலுக்கு நெடிலும், வல்ஒற்றுக்கு வல்ஒற்றும், மெல்ஒற்றுக்கு மெல்ஒற்றும், இடைஒற்றுக்குக் இடைஒற்றும் எதுகை மோனையோடும் கூடிய நால் அடியும் அளவாகப் பொருந்த எழுவாய் பயனிலை ஏய வண்ணக் குழிப்புடைப் பாட்டுப் பாடுதல், கால்களில் தளை பூட்டிக் கொண்டு மேள தாளங்கட்கு இயைய நடிப்பது ஒக்கும் ஆகலின் எளிது அன்று என்பதும் ஈங்குக் கருதிக் கோடற் பாற்றே

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தெய்வீக கவிகளைக் கற்றலும் கேட்டலும் இனிதே!!!

திருச்சிற்றம்பலம்!!

Wednesday, 1 July 2020

அருணகிரிநாதர் புகழாரங்கள்


ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

அருணகிரிநாதர் புகழாரங்கள்:

பாம்பன் சுவாமிகள் பதிகங்கள் தோறும் அருணகிரிநாதரைப் பாடியே பதிகங்களை நிறைவு செய்யும் நியமம் பூண்டு ஒழுகினார்‌ என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த பதிவில் பாம்பன் சுவாமிகள் அருளிய முதல்  மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு பதிகங்களிலும் சுவாமிகள் அருணகிரிநாதரை எப்படி எல்லாம் புகழ்ந்து உள்ளார் என்பதைப் பதிக வரிசையில் காணலாம்.

  • 1. அமரர்கோ -- அருணகிரிநாதன்
  • 2. திருப்பரங்கிரி -- தெள்ளறிஞன் அருணகிரி  
  • 3. திருச்செந்தில் -- அருள் அருணகிரி
  • 4. திருப்பழநி -- உரன் அருணகிரி
  • 5. திருவேரகம் -- அருணகிரிமுனி
  • 6. திருக்குன்றுதோறாடல் -- திருஅருணகிரி
  • 7. திருச்சோலைமலை -- சந்தமுனி எந்தை
  • 8.  திருவிராமேச்சுரம்-- தகை கொண்ட அருணகிரியார், நிஜ அருணை முனிவன்
  • 9. திருப்புலியூர் -- அருணகிரி
  • 10.திருவருணை -- மதர்  அருணகிரி
  • 11.திருக்குமரக்கோட்டம் --  ஓகை கூர் அருணகிரி
  • 12.திருத்தணிகை - அருணகிரி
  • 13. திருமலை -- அருணகிரி
  • 14. திருக்கயிலாசமலை -- தெருள் அருணகிரிநாதன்
  • 15. சண்முகானந்தசிவம் -- சோண சயில நாமத்தன்
  • 16. நிட்களானந்தகுகன் -- நிறை கருணை அருணகிரி
  • 17. சரவணபவானந்தன் -- அருணகிரி எந்தை
  • 18. ஆனந்தமுகில் -- புகழ் படித்த கோன்
  • 19. குகப்பிரமம் -- அருணகிரி 
  • 20. பூரணானந்த குகன் -- கருணை பெருகு அருணகிரி
  • 21. குந்துகால் -- தப்பாது துன்பற்று இமிழ் பாவினம் சொற்ற தக்கோன்
  • 22. கதிரேசன் -- கஞ்ச வீ அடியின் அருளில் நின்று புகழ் கழறினோர்
  • 23. சரவணபவன் -- அருணகிரி
  • 24. நவரத்தின மீக்கூற்று -- சிறுமை இ(ல்)லா இன்ப அருணகிரி
  • 25. உட்பகை ஒழிக்க மனு -- 
  • 26. பெரும்பேறு -- 
  • 27. உள்ளூர்ச் சிவசுப்பிரமணியர் சதகம் -- திரு உளத்திற்கு இனிய அருணகிரி, எரி நிரய யாதனையை நூறு அருணகிரி
  • 28. வேண்டுகோள் -- அருணகிரி
  • 29. பொன்னவிர் மேனி -- செய்ய தீ வரைப் பேர் எந்தை
  • 30. கருணாகரவேலன் -- திருப்புகழ் செப்பிய என்னை ஆள் உடையான்
  • 31. சிகிவாகனன் -- வன்னி சிலைப் பெயரோன்
  • 32. அயிலரசு - அருளால் தண் அம் தமிழ் அனுபூதி அறைந்தோன்
  • 33. கந்தர் இரட்டை மணிமாலை -- கந்தர் அனுபூதி அத்தன்
  • 34. கந்தர் ஒருபா ஒருபஃது -- சண்முக நிச்சயம் ஓர்ந்து திருப்புகழ் சாற்றினவன்
  • 35. மனது -- தெருள் ஆர் அருணகிரி
  • 36. எழிலார் சுரும்பு -- அருணகிரியார்
  • 37. திருநிறைந்த சிவம் -- அருணைப் பெயரான்
  • 38. இந்துமிலைந்தோன் -- பாட்டில் புகழ் அருணைப் பெயரோர்
  • 39. கந்தர் திருவாரம் -- ஏர் கிளர் ஒள் அருணைப்  பேரன்
  • 40. அவனியாசை -- அணாமலை பேருடையான்
  • 41. பகலெல்லாம் -- கந்தர் அலங்காரம் சொன்னோன்
  • 42. கங்கையின் சேய் -- வேத வழி நின்றுள சந்த மாமுனி
  • 43. மண்ணிற் சிறுவீடு -- அருணைப் புதன்
  • 44. புவியாரே -- எஞ்சா அருணைப் பதி இருந்த எந்தை அருணகிரி
  • 45. சொன்னயம் -- அப்பன் நல் அருணகிரி
  • 46. கந்தர் நான்மணி மாலை -- இன்புகழ் முனி
  • 47. நெஞ்சுப்பத்து -- அம் சொல் நயம் விஞ்சிய அருள் புகழ்கள் அந்நாள் நெஞ்சுருக ஓதினவன்
  • 48. உலகவாழ்வு -- அருணை நாதன்
  • 49. ஞாயவாதிகள் விளக்குவர் -- இன்பு அடைந்த அருணகிரி
  • 50. போற்றி விண்ணப்பம் -- தீ அரிப் பெயரோர்
  • 51. சரண விண்ணப்பம் -- எம்மான் அற்புத அருணைப் பேரான்
  • 52. அமிர்தமதி -- அருள் கடல் அருணையான்
  • 53. சிறுமை நீக்குயர் செல்வம் -- ஓது செந்தமிழால் நிரம்பு அனு​பூதி சொன்னவன்
  • 54. துறுவுநோக்கம் -- வெள் ஏனம் தெரிவரு மலைப் பேர் முநி
  • 55. பிழைபொறுக்க முறையீடு -- மாசில் நல் அருணாசலத்தவன் 
  • 56. உள்ளக்களி -- விந்தை மிக உள அருணகிரி
  • 57. திருவுயர்ந்த ஆறெழுத்தான் -- புந்தி நிறைவு உடை அருணகிரி
  • 58. அடியவர்க்கடிமை நாம் -- கொடுநிழல் அவிய வந்தகுறை ஓவ இன்பு குறையாத பேறும் உறவே வடுவு அறு கவிகள் சொன்ன அருணகிரி
  • 59. ஆரணத்திறுதி -- அருணையன்
  • 60. சிவலோக சுந்தரமாலை -- சுமதி உடை அருணகிரி
  • 61. பணம் -- புகழ் குயின்றோன்
  • 62. அபிமானமறுத்தல் -- அருணகிரி
  • 63. மறைமுடிவு -- பூச் சனிப்பு இலா அருணகிரி
  • 64. ஏம விலேகர் -- பரஞ்சுடர் ஓதிப் பேர் திருவாளன்
  • 65. ஶ்ரீ கதிர்காமவேலர் வண்ணம் - அனுபூதி மாமுனி
  • 66. பங்கிகள் -- மதி ஒலியான்
  • 67. பரஞ்சுடர்க்கண்ணி -- அருணை நாதர்
  • 68. பொன்மயிற்கண்ணி -- இன்ப கடல் படிந்த எந்தை அருணகிரி
  • 69. குருபரக்கண்ணி -- அண்ணல் அருணகிரி
  • 70. சதாசிவக்கண்ணி -- எம்மான் அருணகிரி
  • 71. தேந்தேனேயென் கண்ணி -- அருணகிரி நாதன்
  • 72. பரம்பொருட் கண்ணி -- சொல்லேறு அரும் புகழ்கள் சொன்ன பெரியோன்
  • 73. பூரணக் கண்ணி -- ஈர் எண் சகச்சிர சந்தப்பா இயம்பிய மெய் ஆரியன்
  • 74. திருவுருமலைக் கோமகன் -- சிகிவரை ஒலி முனி
  • 75. ஆனந்தக் களிப்பு -- சீர்மலி ஆனந்த வீட்டின்பத்தைச் சேர்ந்த அண்ணாமலைப் பேர் எந்தை
  • 76. சமாதான சங்கீதம் -- முத்தி தரும் குகப்பிரமத்தை வாழ்த்திய முத்தன் அண்ணாமலையான்

குறிப்பு: ஒரு சில பதிகங்களில் அருணகிரிநாதர் பற்றிய குறிப்பினை எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை அதனால் அந்த பதிகங்களில் பெயருக்கு நேரே ஏதும் குறிப்பிடாமல் விட்டுவிட்டோம்.


படத்தில் உள்ள அருணகிரி நாதர் படிமம் (சிலை), பாம்பன் சுவாமிகளின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டிஸ்வரன் பேட்டையில் உள்ள சிவலாயத்திற்கு சுவாமிகளால் அளிக்கப்பட்டது. இன்றும் இக்கோயிலில் உள்ள முருகப் பெருமான் சன்னிதியில் இப்படிமத்தை நாம் காணலாம். ஆண்டு தோறும் பாம்பன் சுவாமி அடியார்களால் அருணகிரி நாதர்  குருபூஜை இக் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த பதிவினை 2020ஆம் ஆண்டு அருணகிரி நாதர் குருபூஜை தினத்தினை (04.07.2020) முன்னிட்டு அருணகிரி நாத ஆனந்த பராபரருக்கு சமர்ப்பிக்கின்றோம். இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் சுவாமிகளும் அவர்தம் அடியார்களும் மன்னித்து அருள வேண்டுகின்றோம்.

இந்த குறிப்புகளைத் திரட்டி தொகுத்து அளித்த பாம்பனடியார் திரு. வெங்கடாசலம் அவர்களுக்கு நன்றி!

அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி போற்றி!!!

திருச்சிற்றம்பலம்