Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Wednesday, 7 October 2020

பாம்பன் சுவாமிகள் பாடல்களில் சொல் விளையாட்டு

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

பாம்பன் சுவாமிகள் பாடல்களில் சொல் விளையாட்டு:

பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பாடல்களில் சொல்நயம் அழகுற அமைந்துள்ளவற்றை  அனைவரும் நன்கு அறிவர். அவற்றில் பல இடங்களில் சொற்களைக் கொண்டு விளையாடும் நயங்களை விரிக்கின் பெருகும் என்பதால், இங்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

1. முதலில் காசியாத்திரை நூலில் அமைந்துள்ள ஒரு கண்ணி

 பாசிவா பாசிவா வென்றியமன் பற்றவரிற்
காசிவா காசிவா வென்பேன் பரஞ்சோதீ

 இந்தப் பாடலின் பொருளறிய முதலில் சீர் பிரித்துக் கொள்வோம்:

 பாசி வா பாசி வா என்று இயமன் பற்றவரின்
கா சிவா கா சிவா என்பேன் பரஞ்சோதீ

 இதன் பொருள்:

பாசி வா! பாசி வா - பாசமுடையவனே வா! பாசமுடையவனே வா!

என்று இயமன் - என்று எமன் கூறி

பற்றவரின் - (என்னை) பற்ற வந்தால்

கா சிவா கா சிவா - காப்பாற்று சிவனே! காப்பாற்று சிவனே​

என்பேன் பரஞ்சோதீ  - என்று சொல்வேன் பரஞ்சோதீ

 இவ்வாறு பாசிவா, காசிவா என்ற சொற்களைக் கொண்டு பொருள் பொதிந்த பாடல் வெண்தளையால் வந்த கண்ணி வகையில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும்.

2.  இரண்டாவதாக, திருக்கந்தர் திருப்பல்லாண்டு என்னும் பதிகத்தின் இரண்டாம் பாடலில் மூப்பு என்ற சொல்லை இரு வேறு பொருள்களில் பலமுறை பயன்படுத்தி உள்ளதைக் காணலாம்.

 மூப்பறு கட்டி ளமைத்திரு மேனியு மூப்புடை யார்க்கெல்லாம்
மூப்புடை மேன்மையும் மூப்புடை யாவிகண் முழுவது மூப்பிளமை
யாப்பறு மாறெமை யாள்கும ராவென நாடிறை மையுமல்கு
பாப்பணை யான்மரு மானெனும் வேலற்குப் பல்லாண்டு கூறுதுமே

 இந்த பாடலில் மூப்பு என்ற சொல்லை முதுமை என்ற பொருளிலும் தலைமை என்ற பொருளிலும் சுவாமிகள் அமைத்து உள்ளார்.

 மூப்புஅறு கட்டு இளைமைத் திருமேனியும் - (முருகப் பெருமான்) முதுமை இல்லாது என்றும் இளமையுடன் விளங்கும் திருமேனியும்;

மூப்புடையார்க்கு எல்லாம் மூப்புடை மேன்மையும் - இங்கு மூப்பு என்ற சொல் தலைமை என்ற பொருளில் வந்துள்ளது. அதாவது தலைமை பண்பு உடையவர்களுக்கு எல்லாம் தலைமை உடைய மேன்மை உள்ளவன் முருகன் என்று சுவாமிகள் கூறுகிறார். "நாயகம் ஆனார்க்கு எல்லாம் நாயகம் ஆனாய் போற்றி" என்று போற்றி விண்ணப்பத்தில் சுவாமிகள் பாடியதையும் ஈண்டு கருத்தில் கொள்க.

மூப்புடை ஆவிகள் முழுவதும் மூப்பு இளமை யாப்பு அறுமாறு எனை ஆள் குமரா என - மூப்புடை ஆவிகள் என்றால் முதுமையான உயிர்கள் என்று பொருள்படும். சைவ சித்தாந்த கொள்கையின் படி, கடவுள் என்று உள்ளாரோ அன்றே உயிர்களும் உள்ளன. "என்று நீ (கடவுள்அன்று நான்(உயிர்)" என்று தாயுமான சுவாமிகளும் கூறியுள்ளார். அதனால் தான் சுவாமிகள் இங்கு உயிர்களைக் குறிக்கும் போது, பழைமையான உயிர்கள் என்று கூறுகிறார்‌. இந்த உயிர்கள் இளமையும் முதுமையும் மாறிமாறி வரும் கட்டு (யாப்பு=கட்டு) உடையன. இந்த கட்டினை அறுக்க உயிர்கள்  "குமரா என்னை ஆள்" என்று ஓலம் இட்டு

நாடு இறைமையும் மல்கு - (கட்டிலிருந்து விடுபட விரும்பும் உயிர்கள்) நாடி விரும்புகின்ற தெய்வத்தன்மை மிகுந்து உள்ள

பாப்பணையான் மருமான் எனும் வேலற்கு - பாப்பு=பாம்பு; பாம்பு அணையை உடைய திருமாலின் மருகனான வேலவர்க்கு;

பல்லாண்டு கூறுதுமே - பல்லாண்டு கூறுவோமாக!

 இந்த பாடலில் மூப்பு என்ற சொல் பலமுறை பயின்று வந்து ஆழமான பொருள் பயந்ததை அறிந்தோம்.

 இதுபோன்று பலபல பாடல்களில் சுவாமிகள் புதிய சொற்களைக் கொண்டு விளையாடியும் அதே நேரத்தில் ஆழமான பொருளினை விளக்கியும் உள்ளார்கள்.

 இங்கு பாம்பன் சுவாமிகளின் பாக்கடலில் இருந்து ஒரு சிறுதுளியினை மட்டுமே அடியேனின் சிற்றவிற்கு எட்டியவரை தெளித்து உள்ளேன்! குறைகள் இருப்பின் அடியார் பெருமக்கள் மன்னித்து அருளவும்.

 குருவருள் வாழ்க!!!

திருச்சிற்றம்பலம்

2 comments:

  1. excellent . வாழ்க வளமுடன் . குருவருள் நம் அனைவரையும் காக்கட்டும் .

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா, மூப்புஎன்ற ஒருசொல்லை அதன் தொடர்ச்சியாக அறுஎன்றும் உடையார்க்குஉடைமேன்மை என்ற சொற்களைப்பயன்படுத்துவதன்‌மூலமு மிகச் செழிப்பான‌நட லை ரை உருவாக்கியுள அல்ல ளந சுவாமிகளின் பெரும் புலமை வேள்வியை நன்கு விளங்கிக் கொண்டேன் லை யா நன்றி ஐயா வாழ்த்து
    கண்கள்.

    ReplyDelete