Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Tuesday, 21 July 2020

ஆடிப்பூரம் - பாம்பன் சுவாமிகள் கல்லாடைப் பெற்ற நன்நாள்:

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள், மயூரநாதனின் திருவருளால், கல்லாடை (காவி உடை) பெற்ற நாள் ஆடி மாதம் பூர நட்சத்திர நன்னாளாகும். 

பாம்பன் சுவாமிகள் பிரப்பன் வலசையில் குமார பரமேஸ்வரனிடம் உபதேசம் பெற்ற நாள் முதல், வெண்ணிறத்த கோவணம் அணிந்து, வெள்ளை ஆடை ஒன்றையே உடம்பில் போர்த்துக் கொண்டு வாழ்ந்தார்.

காசி நகரில் குமரகுருபர சுவாமிகள் அமைத்த பெருமை பொருந்திய மடத்தில் பச்சைப் பயிறும் பச்சரிசியும் கலந்த நல்ல அமுதத்தையும் பாலையும் உண்டபிறகு மேலே போர்த்துக் கொள்ளும் ஒரு வெள்ளாடை வைத்த இடத்தில் இல்லாமை கண்டு சுவாமிகள் சிந்தித்து நின்றபோது, குமார பரமேசுவரனின் அடியவராய முதிய துறவியொருவர் (அங்கிருந்த தம்பிரான் சுவாமிகள்) பொன்னூலிடப்பட்ட சிறந்த இரண்டு புதிய கல்லாடைகளைக் கொண்டு வந்து சுவாமிகள் அரையில் ஒன்றைச் சுற்றியாத்து ஒன்றைக் கழுத்தில் இட்டு வணங்கி நின்றனர்.
இந்த வரலாற்று நிகழ்ச்சியை பாம்பன் சுவாமிகளின் காசியாத்திரை நூலில் பதிவு செய்து உள்ளார்.

கட்டளைக் கலித்துறை 

1. காசிக் குமர குருபரன் செய்த கனமடத்திற்
பாசிப் பயறு கலந்தநல் லன்னமும் பாலுமுண்டங்
கேசற்று நின்ற வெனதரை யிற்கும ரேசனன்பர்
தூசிற் சிறந்தபொற் *காடாய வத்திரஞ் சுற்றினரே

விளக்கம்: காசி நகரில் குமரகுருபர சுவாமிகள் அமைத்த பெருமை பொருந்திய மடத்தில் பச்சைப் பயிறும் பச்சரிசியும் கலந்த நல்ல அமுதத்தையும் பாலையும் உண்டபிறகு மேலே போர்த்துக் கொள்ளும் ஒரு வெள்ளாடை வைத்த இடத்தில் இல்லாமை கண்டு நான் சிந்தித்து நின்றபோது, குமார பரமேசுவரனின் அடியவராய முதிய துறவியொருவர் பொன்னூலிடப்பட்ட சிறந்த இரண்டு புதிய கல்லாடைகளைக் கொடுவந்து என் அரையில் ஒன்றைச் சுற்றியாத்து ஒன்றைக் கழுத்தில் இட்டு வணங்கி நின்றனர்.


*இக்காடாயங் கட்டியகாலம், கலியுகம் 5004இல் நிகழ் சுபகிருது வருடம் ஆடிமாதம் 22ஆம் தேதி புதவாரம் பூர நக்ஷத்திரம் என்க. (6-8-1902).

2. சுற்று மமையங் குமர குருபர சாமிசொந்த
முற்ற மடமிதிங் கேயிட்ட காவி யுடையிரண்டும்
பெற்றிட னின்கட னாகுங் குமர குருப்பெயரே
பெற்ற சுவாமி யெனவுரைத் தாரந்தப் பேரன்பரே.

விளக்கம்: அங்ஙனம் (அவர் செயலைக்கண்டு இஃதென்னை என்று யான் வினவியிடலும்) பேரன்பு கொண்ட அவர் இது குமர குருபர சுவாமிகள் செய்த மடமாகும். இங்கு இட்ட கல்லாடை இரண்டனையும் பெற்றுக் கொள்ளல் நுமது கடனாகும். குமர குருபர சுவாமிகள் பெயரையே பூண்டுள்ள சுவாமீ! என்று உரைத்து நின்றார்.

3. பின்னு மெனையிங் கறியா தெழுந்ததிப் பெற்றியிதை
நன்ன ரிலையெனத் தள்ளே லெனவு நவின்றவன்னார்
சொன்ன மொழியைக் குமர குருபரன் சொல்லெனவே
யென்ன திதயமு மொப்பிப் பரவச மெய்தியதே.

விளக்கம்: மேலும் அவர் யான் செய்த இச்செயல் என்னை அறியாமலே நிகழ்ந்ததாகும். இது நன்றன்று என்று தள்ளுதல் வேண்டாம் எனவும் கூறிய மொழிகளைக் குமரகுருபரனே அருளிச் செய்தது என்று எனது உள்ளமும் ஒப்பிப் பெருங்களிப்பு அடைந்தது.


4. அன்றிறை கோவணங் கட்டிவந் தெற்குய ராக்கஞ்சொலிச்
சென்றநா டொட்டுவெண் கோவணங்கொண்டு சிவப்பிறுணி
யொன்றையே போர்த்துத் திரிந்தவெற் கிச்செவ் வுடையிரண்டு
நன்றெனத் தந்தசெவ் வேளருள் பூர்த்தியு நல்குகவே.

விளக்கம்: பிரப்பன்வலசை நன்காட்டில் நான் தவமிருந்த ஞான்று கோவணம் அணிந்து வெளிப்பட்டு எனக்கு உயர்ந்த ஒரு மொழியை முருகன் அருளிச் சென்ற நாள் முதல் வெண்ணிறத்த கோவணம் அணிந்து சிவந்த நிற மில்லாத (வெள்ளை) ஆடை ஒன்றையே உடம்பில் போர்த்துத் திரிந்த எனக்கு இந்த இருகல்லாடையும் நறியவாம் என்று வழங்கி யருளிய செவ்வேட் பரமன் திருவருள் நிறைவையும் வழங்கி யருள்வானாக.





இந்த மடம் காசியில் உள்ள கேதாரக் கட்டத்தில் ஸ்ரீ குமாரசுவாமி மடம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த அருள்நிகழ்ச்சியின் நினைவைப் போற்றும் விதமாக, பாம்பன் சுவாமிகளின் திருவுருவப் படமும் இந்த நான்கு பாடல்கள் பொறித்த பதிவுக் கல்லையும் இன்றும் காணலாம்.



குருவருள் வாழ்க!

8 comments:

  1. ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

    ReplyDelete
  2. ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

    ReplyDelete
  3. பாம்பன் சுவாமிகள் கல்லாடை பெற்ற ஆடிப்பூரம் நாள் - திருநெல்வேலி பதிகம் 123ம் ஆண்டு விழா

    https://youtu.be/WoF7G5cC2Vo

    ReplyDelete
  4. தவராஜயோகி பாம்பன் குமரகருதாச சுவாமிகளுக்கு சைவத்தின் போர்ப்படை தளபதி என்ற அந்தஸ்தை உறுதிசெய்வதாகவே இநத கல்லாடை போர்த்திய அற்புதமான நகழ்ச்சியை கருதுகிறேன்.
    ஶ்ரீமத் குமரகுருதாச சாமிகளுக்கரோஹரா.
    வெற்றிவேல் முருகனுக்கரோஹரா..இவண் ஆறுமுகம் காஞ்சிபுரம்.

    ReplyDelete
  5. நன்றிகள் ஐயா.

    ReplyDelete