Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

Sunday, 7 June 2020

பாம்பன் சுவாமிகள் பாடிய வினாவுத்தரம் - பகுதி 2

ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

வினாவுத்தரம்: (பகுதி 2):

பாம்பன் சுவாமிகள் வினாவுத்தரமாக பாடிய திருவலங்கற்றிரட்டு முதற்கண்டத்தில் உள்ள பாடலைச் சென்ற பதிவில் பார்த்தோம். இனி இரண்டாம் கண்டத்தில் உள்ள முதல் பாடலினை பார்ப்போம்‌.

சமரமுதர் நாமமெது சாகா
விமலரணி பூணெதுமின் வில்லென்
குமரகுரு தாசனிறை கோயார்
அமரர்பணி சோதிமுரு கையன்

இப்பொழுது ஒவ்வொரு கேள்விக்கும் உள்ள பதிலைக் கூட்டுவோம்.

சமர் அமுதர் நாமம் எது? சமர் என்றால் போர், சண்டை; அமுதர் என்றால் தேவர்; போரிடும் (அரக்கர்களுடன்) தேவர்களை குறிக்கும் பெயர் எது? அமரர் என்பது விடையாகும். அமரர் என்றாலும் தேவர் என்றாலும் ஒன்றே.

சாகா விமலர் அணி பூண் எது? மரணமில்லாமலும் மலங்கள் இல்லாதவரும் ஆன சிவபெருமான் அணிகின்ற ஆபரணம் எது? விடை பாம்பு என்பது. பாம்பை பணி என்று கூறுவது வழக்கம். ஆதலால் இதன் விடை பணி ஆகும்.

மின் வில் என்? - மின் என்றால் மின்னுதல்; வில் என்பது ஒளியைக் குறிக்கும் சொல். மின்னுகின்ற ஒளி என்பது சோதி. ஆகவே இதன் விடை சோதி ஆகும்.

குமரகுரு தாசன் இறை கோ யார்? - பாம்பன் குமரகுரு தாசரின் தெய்வ அரசன் யார்? முருகையன் என்பது விடை. குமரகுரு தாசரின் இறை முருகு என்றும்; கோ யார்? என்பதற்கு விடையாக ஐயன் என்ற சொல்லைப்  பெற்று முருகு+ஐயன்=முருகையன்  என்றும் விடை பெறலாம்.

இந்த அனைத்து விடைகளையும் கூட்ட,
அமரர் +பணி+சோதி+முருகையன் என்று வரும்.

பாடலின் நான்காவது வரியில் அமரர் பணி சோதி முருகையன் என்று சுவாமிகள் விடை கூறுகின்றார்.

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment