Scrolling

என்னைத் தள்ளினாலும் என்னை நம்பினவர்த் தள்ளேல் - பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் அருளிய அனவரத பாராயண அஷ்டகம்

          அனவரத  பாராயண அஷ்டகம்

உரை: டாக்டர். S.P. சபாரத்தினம், M.A., Ph.D

மன்றெனும் பதியுறை மழஇப முகவனும்
நன்றெனும் பிரணவ அவன்இளை ஞனும்மறை
தொன்றெனும் பொருளெனச் சுடர்சிவ னும்உமையும்
ஒன்றெனும் பெரியவர் உயர்பதம் பணிவேன்   (1)

மன்று எனும் பதியுறை மழ இப முகவனும் - ஞானத் திருமன்று எனப்படும் பொன்னம்பலத்தில் எழுந்தருளித் திகழும் இளமை நலம் பொருந்திய யானை முகத்தை உடைய விநாயகப் பெருமானும்; 

நன்றெனும் பிரணவ அவன் இளைஞனும் - எப்பொழுதும் மங்கள நாதமாக உள்ள பிரணவத்தின் வடிவாக உள்ள விநாயகப் பெருமானின் இளவலான குகப்பெருமானும்; 

அறை -வேதாகமங்களில் புகழ்ந்து கூறப்படுகின்ற; 

தொன்றெனும் பொருள் எனச் சுடர் சிவனும் - முன்னைப் பழம் பொருளுக்கும் பழம் பொருளாகத் திகழ்பவனான சிவபெருமானும்; (தொன்றெனும் பொருள் எனச் சுடர்) 

உமையும் - அவ்வாறே சிவத்தோடு ஒத்துப் பழம் பொருளாக விளங்கும் உமையும் (ஆகிய இந் நாற்பெரும் தெய்வமும்); 

ஒன்றெனும் பெரியவர் - உண்மையில் ஒரே பரம் பொருளே: வேறுபட்ட தெய்வங்கள் அல்ல என உணரும் ஞானப் பெரியோர்களின்; 

உயர்பதம் பணிவேன் - உயர்ந்த பெருநிலையில் விளங்கும் திருவடிகளை நான் வணங்குவேன்.

(கணபதி, கந்தன், சிவன், உமை - இந்நால்வரும் ஒருவரே. இந்தக் கருத்தை உறுதியாக நெஞ்சிற்கொண்டுள்ள பெரியோர்களின் திருவடிகளை எப்பொழுதும் வணங்கு கின்றேன் - இக்கருத்தே இனிவரும் ஏழுபாடல்களிலும் வலியுறுத்திக் கூறப்படுகிறது).

அள் உலையாப் படை அறுமுகவனு மனம்
துள்உலைவு ஓட்டுதண் சுடர்அணி பரமனும்
வள் உலையாக் கிரிமகளும் ஐங்கரனும் என்
உள் உலையாப் பொருள் ஒன்றெனத் தொழுதேன்  (2)

அள்ளுலையாப் படை அறுமுகவனும் கூர்மையில் சிறிதும் குறைந்து விளங்காத வேற்படையைக் கொண்டுள்ள அறுமுகப் பெருமானும்; 

மனம் துள் உலைவு ஓட்டு தண் சுடர் அணி பரமனும் - மனம் துள்ளி அலைபாய்வதையும் வருத்தம் உறுவதையும் தவிர்த்து விடுபவனும், குளிர்ந்த பிறைச் சந்திரனை அணிந்து ருப்பவனுமான சிவபெருமானும்; 

வள்உலையாக் கிரிமகளும் - அழகு அல்லது அருள்வளம் என்றும் குறைவு படாமல் உள்ள மலைமகளாம் உமையும்; 

ஐங்கரனும் ஐந்து  திருக்கரங்களை உடைய கணபதியும்; 

என்னுள் உலையாப் பொருள் ஒன்று எனத் தொழுதேன் - என் உள்ளத்துள் எப்பொழுதும் அணையாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கும் ஒரு பரம் பொருளே எனக் கருதி வணங்குகிறேன்.

ஆதித்தன் மதிஅனல் ஆகு முந்நயனன் அஞ்
சோதித்தண் முகஉமை தோம்இல் ஐங்கரன் முரண்
காதித்தன் களிதரு கடம்பன் ஒன்றெனும் நிசம்
ஓதித்தண் அளிமிக உறுதுயர் களைவேன்  (3)

ஆதித்தன் மதி அனல் ஆகும் முந்நயனன் - சூரியன், சந்திரன், அக்கினி இவர்களையே தனது மூன்று கண்களாகக் கொண்டிருக்கும் சிவபெருமானும்; 

அஞ்சோதித் தண்முக உமை - அழகிய ஒளிபொருந்திய சந்திரன் போன்ற திருமுகம் உடைய உமையும்; 

தோம் இல் ஐங்கரன் - வணங்குவாருடைய குற்றங்களைப் போக்கி விடுகின்ற ஐங்கரனான கணபதியும்; 

முரண் காதித் தன் களிதரு கடம்பன் - பகையை வென்று தனது ஆனந்த நிலையை அடியார்க்கு அளித்தருள் கடம்ப மாலை அணிந்த கந்தப் பெருமானும்; 

ஒன்றெனும் நிசம் ஓதி - உண்மையில் ஒருபரம் பொருளே எனும் உண்மையை ஓதுவதன் மூலம்; 

தண் அளி மிக - இறைவனின் குளிர்ந்த கருணை மேன்மேலும் மிகுந்து விளங்க; 

உறுதுயர் களைவேன் - பெருகி வரும் துன்பங்களெல்லாம் நீங்கி வாழ்வேன்.

              மயல் களை சிவையையும் மதகரி முகனையும்
                அயல் களை அயில்அரசனையும் ஒன்னலர்கள் தம்
                இயல் களை சிவனையும் ஒருபொருள் எனின்இடர்ப்
                புயல் களை அருள்உறும் எனநனி புகழ்வேன்   (4)

மயல் களை சிவையையும் அடியார்களின் மனமயக்கத்தை (அறியாமையை, மோகத்தை) நீக்குகின்ற உமை அம்பிகையையும்;

 மதகரிமுகனையும் - மதம்வாய்ந்த யானை முகம் உடைய கணபதியையும்; 

அயல் களை அயில் அரசனையும் - அன்னியம் எனப்படும் துவிதநிலையை அழித்து அத்துவிதப் பேற்றை அருளும் வேற்படை அரசனான குகப்பெருமானையும் (அல்லது அயலார் எனப்படும் பகைவரை அழிப்பவனான வேற்படை அரசனையும்);

 ஒன்னலர்கள் தம் இயல் களை சிவனையும் - பகைவர்களின் தீமைத் தன்மைகளை நீக்கிவிடுகின்ற சிவபெருமானையும்; 

ஒரு பொருள் எனின் - ஒரு பரம் பொருளே எனக் கருதி வழிபட்டால்;
 இடர்ப் புயல் களை அருள் உறும் -துன்பமாகிய புயற்காற்றை நீக்கிவிடுவதான அருளானது வந்து சேரும்; 

என நனி புகழ்வேன் - என்று கருதி மிகவும் நன்றாகப் புகழ்ந்து துதிப்பேன்.

மாலொடு விதி அறியாத செம்மரை மலர்க்
காலொடு நவிரமும் ஆர்இறை களிஉமை
வேலொடு வருகுகு வேள்களப முகன் மெய்
வாலொடு மிளிர்அறிவு இனிதுஎன மகிழ்வேன்  (5)

 மாலொடு விதி அறியாத செம்மரை மலர்க் காலொடு நவிரமும் ஆர் இறை - திருமாலும் நான்முகனும் கண்டு அறியாத செந்தாமரை மலர் போன்ற திருவடியும் திருமுடியும் (நவிரம் - தலை உச்சி; அதாவது திருமுடி) உடைய சிவபெருமான்; 

களி உமை - சிவானந்த மயமான உமை அம்பிகை; 

வேலொடு வரு குகவேள் - அடியாரைக் காக்க எப்பொழுதும் வேலோடு விரைந்து வரும் குசுப் பெருமான்; 

களப் முகன் - யானைமுகனான கணபதி (ஆகிய இந்நால்வரும்); 

மெய் வாலொடு மிளிர் அறிவு - எப்பொழுதும் தூய்மையாகவே திகழ்கின்ற ஞானமே வடிவான ஒரேபரம் பொருளே எனக் கருதி; 

இனிதென மகிழ்வேன் - இவ்வாறு பேதம் காணாமல் ஒன்றெனக் கண்டு வழிபடுவதே சிறந்தது எனக்கருதி மகிழ்ச்சி அடைவேன்.


திருவருள் புரியும் ஐம் கிலீம் திரிபுரை பரை
குருவருள் புரி சௌம் கிரீம் சிவை குகன் இடர்
ஒருவுஅருள் புரிபத விநாயகன் உயர்சிவன்
அருவருள் புரிபதியாய் எனைக் காக்க  (6)


திருவருள் புரியும் ஐம் கிலீம் திரிபுரை - திருவருள் புரிகின்ற ஐம், க்லீம் எனும் பீஜாட்சரங்களுடன் விளங்கும் திரிபுரையும் 

பரை - பராசக்தியும்; 

குருவருள் புரி சௌம் கிரீம் சிவை - ஞான குருவாக எழுந்தருளி ஞானப் பாற்சோறு அளிப்பவளும் "சௌம்" "ஹ்ரீம்" எனப்படும் பீஜாட்சரங்களுடன் கூடியவளு மான உமையம்பிகை; 

குகன் - குகப் பெருமான்; 

இடர் ஒருவு அருள்புரி பத விநாயகன் - வணங்கும் அடியார்களுக்கு நேர உள்ள இடையூறுகள் நீங்கும் வண்ணம் அருள்புரிகின்ற திருவடிகளை (அல்லது கருணை நிலையை) உடைய கணபதி; 

உயர் சிவன் - ஏனைய தெய்வங்களினும் மேம்பட்டு விளங்கும் சிவபெருமான் (ஆகிய இந்நால்வரும்); 

அருஅருள் புரிபதி - தடத்த நிலையில் இல்லாமல் சொரூப நிலையில் விளங்கி அருள்புரியும் ஒருபரம்பொருளே; 

ஆய் எனைக் காக்க - இவ்வாறு ஒரேபரம் பொருளாக விளங்கி என்னைக் காத்தருள்க. (பீஜாட்சரங்கள் வரும் இத்திருப்பாடலை மிகவும் கவனத்துடன் பிழையின்றி ஓதுக)

 

வாள்நுதல் மடப்பிடி மலைப்புன மான் நலம்
பேணுதல் விழிச்சர வணபவப் பெருந்தகை
மாண்நுதல் நயன கம் கணபதி வளர்அனல்
காண்நுதல் அரன்உமை அருள்எனைக் காக்க  (7)

வாள் நுதல் மடப்பிடி - ஒளிபொருந்திய நெற்றியை உடைய தெய்வயானைப் பிராட்டியார்; 

மலைப்புனமான் - வள்ளிமலைத் தினைப்புனத்தில் விளங்கிய வள்ளிநாயகியார் ஆகிய இருவரின்; 

நலம் பேணுதல் விழிச் சரவணபவப் பெருந்தகை - பேரழகையும் கண்டு களிக்கும் திருக்கண்களை உடைய, சரவணபவ எனும் திரு ஆறெழுத்துக்குரிய பெருந்தகையாம் குகப்பெருமான்; 

மாண் நுதல்நயன 'கம்' கணபதி - பெருமை பொருந்திய நெற்றிக் கண்ணை உடையவரும் 'கம்' எனும் பீஜாட்சரத்துடன் கூடியவரு மான கணபதி; 

வளர் அனல் காண் நுதல் அரன் - வளர்கின்ற அக்கினி, நெற்றிக் கண்ணாகக் காணப்படும் சிவபெருமான்; 

உமை - உமை அம்பிகை (ஆகிய இந் நால்வரும் ஒருபரம் பொருளே ஆதலின் அப்பரம் பொருளின்); 

அருள் எனைக்காக்க - என்னைக் காப்பதாக.

பாமகள் மறைபுகழ் ஓம்கண பதிஎழில்
சீமகள் நனிபுகழ் ஓம்நமச் சிவாய வை
பூமகள் புகழ்உமை பூம்புகழ்க் கவிஇறை
ஏம்அக கனஅருள் காத்தருள்க எனையே  (8) 
 

பாமகள் மறை புகழ் ஓம் கணபதி - கலைமகளும் நான் மறையும் புகழ்கின்ற ஓங்காரப் பரம்பொருளான கணபதி; 

எழில் சீமகள் நனிபுகழ் ஓம் நமச்சிவாய - அழகு பொருந்திய திருமகள் துதிக்கும் திருவைந்தெழுத்துக்குரிய சிவபெருமான் (திரு ஐந்தெழுத்தே வடிவாக விளங்கும் சிவ பெருமான்); 

வை பூமகள் புகழ் உமை - நிலவுலகத்தாலும் திருமகளாலும் புகழப்படும் உமை அம்பிகை; 

பூம்புகழ்க் கவி இறை - அருட்பொலிவும் சந்தப் பொலிவும் மிகுந்த திருப்புகழ்ப் பாடல்களை அருளிய அருணகிரிப் பெருமானின் இறைவனான முருகப்பெருமான் (ஆகிய இந்நால்வரும் ஒரே பரம்பொருள் ஆதலின் அப்பரம் பொருளின்); 

ஏம் அக கன அருள் பேரின்பக் களிப்பை - உள்ளத்தில் ஊற்றுவதான பெருமை பொருந்திய திருவருள்; 

காத்தருள்க எனையே - என்னை என்றென்றும் காத்தருள்வதாக.


 


No comments:

Post a Comment