(பாம்பன் சுவாமிகள் 17.02.1919-ல், சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த ஜன சபையில் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு. பாம்பன் சுவாமிகள் ஆற்றிய இச்சொற்பொழிவினை நேரில் கேட்டு தொகுத்து எழுதித் தந்தவர் பாம்பன் சுவாமிகளின் சீடர்களில் ஒருவரான சைவப் பெரியார் என்று போற்றப்படும் திரு. ச. சச்சிதானந்தம் பிள்ளை பி.ஏ., எல்.டி., ஆவார்.)
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவில்
சாடுந் தனியானை சகோதரனே"
அதனுளாய சிதம்பரத் துளி
சததமுஞ் சுக நடனமேபுரி
கதறுமா மறையவனை யன்றொரு
முத்திதந் தனுதின முழுப்பல னல்கச்
சத்திய மாவது சரவண பவவே”
இவ்வுபந்நியாச அறிக்கைத் தாளின் தலைப்பினுள்ள "உருவாயருவாய் உளதாயிலதாய்.......... வருவாய் அருள்வாய் குகனே” என்னும் பாடல் அருணகிரியார் வாக்கன்று. புஷ்பரத செட்டியார் முதன் முதல் அச்சிட்ட கந்தரனுபூதிப் பதிப்பினின்றும் "துாசா மணியும் பேசா அனுபூதி பிறந்ததுவே" என்னும் பாட்டோடு முடியும் 43 பாடலை மட்டுங்கொண்டது அந்நூல் என்று உணரலாகும். அச்சரங்கள் 51 ஆதல்பற்றிப் போலும் எட்டும் பாடல்கள் பின்னர்ச் சேர்க்கப்பட்டன.
மேற்சொன்ன 43-ம் செய்யுளோடு கந்தரனுபூதி முடிகின்ற தென்பதே என் கொள்கையும். ஆன்மாக்கள் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையுடையன. யான் இன்று கூறுவது மஹாத்மத் தன்மையை யடைந்த பேர்கள் நீங்கிய ஏனை யோரைக் குறித்ததாகும். அதைக்கேட்ட, அதன் பொருளைச் சார்ந்து பயனுறுவீர்களென்பது என் கருத்து.
இன்று யானெடுத்தக் கொண்ட விஷயம் சைவ மகிமை என்பது. சிவசம்பந்தம் சைவம். இச்சம்பந்தம் எதனால் ஏற்படுவது? தீக்ஷையினாலா? அதீக்ஷிதர் காணா துண்ணலினாலா? புலாலுண்ணாமையினாலா? அல்லது பரம்பரையாய் ஒரு குலத்திற் பிறந்த தன்மையினாலா என்று கவனிக்க வேண்டும்.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் எல்லோருக்கும் தீக்ஷை செய்யப்படவில்லை. ஆகையால், தீக்ஷையே சைவம் என்று சாதித்தல் கூடாது. இப்படி சொல்லுவதால் தீக்ஷை செய்துகொள்ள வேண்டாமென்று யான் சொல்லியவனாகேன். அறுபத்து மூவருட் பலர் அதீக்ஷிதர். அதீக்ஷிதர் காணாமலுண்பதால் பெறும் ஞானமென்னோ? அதீக்ஷிதரோடு விவாக சம்பந்தங் கூடாதென்னுங் கட்டுப்பாடு அவரவர் குடும்பலக்ஷணத்தை யொட்டி எழுந்ததொரு வரம்பென்க. தீக்ஷை பெற்றாருள்ளும் பெறாதாருள்ளும் நல்லவரும் தீயவரும் இருக்கக் காண்கின்றோம். ஆதலால், தீக்ஷை பெற்று கொள்ளன் மாத்திரையாலேயே இச்சிவ சம்பந்த உணர்ச்சி ஏற்பட்டுவிடுமென்று சாதிக்க இயலாது.
இனி புலாலுண்ணாமையைப் பார்ப்போம். புலாலுண்ணல் அநாசாரம். ஆனால், புலான் மறுக்கும் ஆசாரம் ஒன்றால் மாத்திரமே ஒருவற்குச் சைவம் சொந்தமாய்விடாது. ஆகும் என்றால் ஆடு,மாடு. யானை, ஒட்டை முதலிய சாகபக்ஷணி களுக்குச் சிறப்புச் சொல்ல நேரிடும். புலாலுண்ணாமையை நல்ல ஆகாரம் என்ற அளவிற் போற்ற வேண்டுமேயன்றி, அதுவே சைவம் என்னல் அடாது. ஆகையால்
இவை போன்றே, வேறு சில அருமைகள் தாமும் சைவமாகிவிட மாட்டா. ‘பூமிக் குழிக்குள் யானிருப்பவன். ஆதலால் யான் சைவன் என்னலாகாது. என்னை? குழிக்குள்ளிருக்கும் தவளையும் சைவமாகுமாதலின். ஒருவன், 'யான் தலையில் காலைமாட்டித் தலைகீழாய்த் தொங்க வல்லேன், இது சிவத்துவமல்லவா' எனின். வௌவாலும் அவ்வாறு தொங்குகிறதே என்க. 'யான் ஊர்களில் வசிப்பதில்லை. மலைவனங்களிலேயே சஞ்சரிக்கின்றேன். ஆதலின் யான் சைவன்' எனின் பிராணிகள் பல அப்படி வசிக்கின்றனவே என்க. 'யான் தண்ணீரில் செபிக்கின்றேன். ஆதலாற் சைவன்' என்று கூறில், அவர் செபிப்பது யாது? சிவமந்திரந்தானோ அன்றோ என்று சோதிக்க வேண்டும். அஃதாயின் மீனைக்காட்டினும் விசேடமுண்டு என்று கூறலாம். புண்ணிய தீர்த்தத்தில் மூழ்குவதால் யான் சைவன்' என்னில், மீன்கள் ஏகதேசமாக வன்றி எப்போதும் அப்படி மூழ்கியுள்ளனவே என்க. 'நல்ல பாடல் பாடுகின்றேன். அதனால் யான் சைவன்' என்னில், வானம்பாடியும் குயிலும் இனிமையாய்ப் பாடுகின்றனவே என்க. 'சைவத் திருமுறை வைத்துக்கொண்டு பாராயணம் பண்ணுகின்றேன்' என்னில் அது மிக நல்லதேயாயினும் அஃதொன்றினால் மட்டும் ஒருவன் சைவனாய் விடுமாறில்லை என்க.
இவ்வாறே உள்ளானைப் போலும் மாடப் புறாவைப்போலும் நிற்றலாலும் சைவம் வாய்த்துவிடாது. பாம்புபோல் சின்னாள் வாயுபக்ஷணம் பண்ணுதலாலும், பட்டினியாயிருத்தலாலும், காட்டுக் கழுகுபோல் சருகுண்பதாலும், பறவைபோல் ஆகாயத்தில் பறத்தலாலும் பூசஞ்சாரம் செய்வதாலும் அது சித்திப்பதில்லை.
இப்படியே மூச்சடக்குவதனாலும் தனிச் சிறப்பல்ல. முத்துச் சலாபங் குளிப்பார்க்குமது கைவருமாதலின் 'யோகிகள் பிராணாயாமம் பற்றி எழுதியுள்ளார்களே' என்னில், சிவயோகிகள் எழுதியிருந்தால் அதுபற்றி யோசிப்பாம் என்க. தேகாப்பியாசத்தால் தேகம் வலுப்படுவது போலப் பிராணாயாமத்தால் வாத, பித்த, சிலேத்தும, சமத்துவம் உண்டாகலாம். ஆனால் ஆபத்தும் விளையலாம். துருத்தியைக் கும்பித்து யானும் இளமையில் பிராணாயாமம் சில காலம் செய்தேன்; அது வேண்டாமென்று உணர்த்தப்பட்ட பின்பதை நிறுத்தினேன்.
"எரிபெ
ருக்குவ ரவ்வெரி யீசன
துருவ
ருக்கம தாவ துணர்கிலார்
அரியயற்
கரியானை அயர்த்துப் போய்
நரிவிருத்தம
தாகுவர் நாடரே”
“கான
நாடு கலந்து திரியிலென்
ஈன
மின்றி இருந்தவஞ் செய்யிலென்
ஊனை
யுண்ட லொழிந்துவான் நோக்கிலென்
ஞான
னென்பவர்க் கன்றிநன்கில்லையே”
"வேத
மோதிலென் வேள்விள் செய்யிலென்
நீதி
நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி
யங்க மோராறு முணரிலென்
ஈசனை
யுள்குவார்க் கன்றி யில்லையே''
"கூட
வேடத்த ராகிக் குழுவிலென்
வாடி
யூனை வருத்தித் திரியிலென்
ஆடல்
வேடத்த னம்பலக் கூத்தனைப்
பாட
லாளர்க் கல்லாற் பயனில்லையே''
"கோடி
தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி
னாலு மரனுக்கன் பில்லையே
ஓடு
நீரினை யோட்டைக் குடத்தட்டி
மூடி
வைத்திட்ட மூர்க்க னோடொக்குமே''
என்னும் அப்பர் திருவாக்குகளை ஊன்றிப் பார்க்க.
யான் மேலே கூறியவை தவத்திற்குரியவை எனினும், அவை சிவத்தை முன்னிட்டுச் செய்யப்படாவிடின் சைவத்திற்குரியனவாகா
அவனன்றிச்
செய்யு மருந்தவ மில்லை
அவனன்றி
மூவரா லாவதொன் றில்லை
அவனன்றி
யூர்புகு மாறறி யேனே"
சிவம் என்பது அந்வய நாமம். முத்திக்குச் சிவம் என்னும் பேருண்டு. எனவே முத்தி விரும்புவோரெல்லாரும் சைவர் என்று கோடல் கூடும்.
கைவந்திடவே மன்றுள் வெளிகாட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந்துழலும் சமயநெறி புகுதவேண்டா முத்திதருஞ்
தெய்வசபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே."
என்னுந்
தாயுமானார் திருவாக்கைக் கருதுக. பிறசமயங்களைப் பற்றி யான் பேச வரவில்லை. அவைகளைப்
பற்றிப் பொய் வந்துழலும்" என்று தாயுமானார் புகன்றதன் கருத்தை, சமயாதீதப்பழம்பொருள்
என்றதை விளக்கு முகத்தால் புலப்படுத்துகின்றேன் சைவ சமயம் ஒரு மரம் போன்றது. அதில்
இலை, அரும்பு, காய், கனி உண்டு கீழ் நிலையினும் மேல் நிலை ஏற்றம் எங்கே ஆதி ஏற்பட்டதோ
அங்கே அந்தமுமுண்டு. பழத்தில் வித்துண்டு மேற் பாடலில்" பழம்பொருளை' என்பற்குப்
'பழமாகிய பொருளை என்று பொருள் கொள்ளலாம். அதனைச் சைவம் தன்பாற் கொண்டுள்ளது. கிளையிலுள்ள
வரை பழம் மரத்தோடு சேர்ந்தது. கிளையை விட்டு நீங்கின பின்பே புசிப்பர் மானிடர். அப்படி
வேறுபடுத்துந் தன்மையில் சைவம் சமயாதீதமாகின்றது. ஆனால் அப்போதும் அது பழமே கொம்பரை
விட்டுக் களைந்தது தான் வேறுபாடு. சமயமே "சமயங் கடந்தமோன சமரச" மாய் விடுகின்றது.
ஆனால் பழந்தின்றவன் காய் தின்னான் என்னும் நுட்பத்தையு முணர்க.
ஆயின், ஒவ்வொருவனும் வரிசையாகத்தான் சமய ஏணிப்படியிற் போக வேண்டுமோ? சாமுசித்தனாவான் முற்பிறப்பில் விட்ட விடத்திலிருந்து, இப்பிறவியில் தொடங்குவன். *எப்போது. விரத்தி தோன்றிற்றோ அப்போதே ஞானநெறி நிற்க என்பது சுருதி. இதற்குக் காலவரம்பில்லை. சரியை கிரியை யோகங்களை எந்நாளும் ஒவ்வொருவனும் செய்ய வேண்டுமென்னல் தவறு வேண்டுமென்னில், ஒரு நாளும் முத்தியில்லாமற் போம்.
இங்ஙனம் கூறிய சைவ சமயம் இறைவ னனுக்கிர கத்திற்கு நிலைக்களமாய் விளங்குவது இவ்வநுக்கிரகத்தை ஐம்முகச் சிவம் அறுமுகச் சிவம் என்னும் இரண்டு மூர்த்தி விஷயமாய்ப் பெறலாகும். இங்கு ஐம்முகச் சிவனைப் பற்றிப் பேசுவல். சாதகற்குச் சமய ஏற்பாடு அவசியம் அஃதில்லா விடில் அவன் முயற்சி, காலில்லாதவன் நடக்க முயலுவதை யொக்கும். மக்கள் வாழ்க்கைக்கு ஏதோ ஒரு சமயம் வேண்டும்.
திக்பஸ்ம
ரஹிதம் பாலம், திக்ராமம் அசிவாலயம்
திக்
அநீசார்சனம் ஜன்ம, திக்வித்யா மசிவாச்ரயாம்'
என்னும்
சுருதி யாரை நோக்கிக் கூறுகின்றது? பொதுவில் யாவரையும் நோக்கியே. இந்த பிருஹஜ்ஜாபாலச்
சுருதியின் பொருள்: "பஸ்ம மணியாத நெற்றியைச் சுடு சிவாலய மில்லாத கிராமத்தைக்
கொளுத்து. சிவார்ச்சனை இல்லாத ஜன்மத்திலே தீயைவை சிவனை யாச்சிரயிக்காத சாத் திரத்தை
எரித்து விடு" என்பதாம். எனினும் சிவனடி யார்க்கு அது சிறப்பு வகையில் முக்கியமாகும்.
பூத்யின ப்ரமதி தவ்யம்' என்னும் தைத்திரீயம் திருநீற்றை விடக்கூடாதென்று வற்புறுத்தி
ஆணையிடுகின்றது. சிலர், 'மனக்குவிவைப் பற்றி இப்படி வற்புறுத்தாது சாம்பற் பூச்சுக்கு
இந்த மகிமை தருவது எற்றுக்கோ?
திருநீறணித லென்னும் விதி அவசியம் தானோ', என்று ஆசங்கிப்பர். கடவுள் எதை எதை ஏன் அமைத்தார் என்று நாம் காரணஞ் சொல்ல முடியுமா? ஒரு மரத்தில் பூக்கள் பல நிறத்தோடு பூத்தற்குக் காரணங் கூற முடியுமோ? முகத்தில் இரண்டு கண்ணுமிருப்பானேன்? பின்புறமேன் இருகண்களில்லை. இப்படிப் பல கேட்கலாம் ஆகையால், எது சிவனால் கட்டளையிடப்பட்டதோ அதைச் செய்க. செய்யாமலிருந்தாலென்ன' என்பது கடவுள் கட்டளையை மீறினாலென்ன என்று கேட்பதேயாகும் ஆனால் இங்குக் கவனிக்க வேண்டியது, இது கடவுள் கட்டளை தானோ என்பது. 'மந்திரமாவது நீறு', 'வேதத் திலுள்ளது நீறு' என்றெல்லாம் எழும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்கே சாக்ஷி. அவர் அது கொண்டு சமணக்கூன் பாண்டியன் சுரந்தீர்த்தார். அச்சுரத்தைத் தீர்க்க அவர்க்கு வேறு வகையிருந்தும், சைவ சின்னமாகிய விபூதியைக் கொண்டு நீக்கி அதன் பெருமையை நாட்டினார். நோயைக் கொல்ல விபூதி கருவியாயிற்று சிவபெருமான் திருவுள்ளத்தை நாமறியாவிடினும் இக்காரியத்தில் திடபத்தி யுண்டாக வேண்டும். வேறு மருத்துவ நூற் காரணங்களு மிருப்பினுமவை ஈண்டு வேண்டப்படா. சிவனாணைக்குக் கீழ்ப்படிக "வெண்ணீறணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாமஞ்சுமாறே என்றவிடத்து, சிவ வழிப்பட்டார்க்கு இது போதிக்கத்தக்கது. படாதார்க்குப் போதிக்கத் தக்க தன்று என்பது மணிவாசகர் கருத்து ஒரு சமய இனத்தவரென்னும் சமய ஒற்றுமை நோக்கி இங்ஙனம் அருளினாரென்று நினைக்கின்றேன்.
இங்கு ஒரு சிறிது சைவ சமய குரவர் பெருமையைக் குறிக்கக்கடவேன். அவர்கள் தெய்வ மகிமை பெற்று விளங்குவோராவர். வடமொழியில் பல ஆசிரியன்மார்கள் நூல்களுள ஆனால் அவையெல்லாம் அவ்வம் முனிவர் களருளிய மொழிகளே என்பதற்குச் சான்றில்லை. அன்றியும் அவை மிகவும் பண்டையன. ஆனால் நால்வர்கள் கருத்துக்களை அறிவிக்க அவர்கள் அருட்பாடல்களே உள்ளன. அவை எழுந்த காலமும் இரண்டல்லது மூன்றாயிர ஆண்டுகட் குட்பட்டதே. பதினெண்புராண வாக்கியங்களனைத்தையும் வியாசவாக்கியம் என்ன முடியாது. பிரம சூத்திர மட்டும் அவர் வாய் மொழி யென்னலாம். பாடியம் எழுதினோர் சுருதி துணை கொண்டு பலவாறு எழுதி, அவரவர் உரையையே சுருதி சம்மதித்தது'. 'சரஸ்வதி ஒப்பியது' என்றெல்லாம் உயர்த்திக் கூறலாயினர். இந்நூல்களை யெல்லாம் விட நம்சமயாசாரியர் அருளிப்பாடுகள் சிறந்தவை. அவர்கள் செயல்கள் சிவன் ஒருவனுளன் என்பதைக் காட்டுகின்றன. இதையும் நம்பாத ஒருவன் வேறெதைத்தான் நம்புவான்? மற்ற பல நம்பிக்கைகளிலும் அவர்கள் வாக்கியங்களை நம்பல் சிறந்ததாகும். அவர்கள் பாடல்களைச் சிவபெருமான் அங்கீகரித்துள்ளார். அவர்களை நம்பினோர் அவர்கள் அடைந்த இடத்தை அடையலாம்.
இனி 'உருத்திராக்க' மென்பது 'ருத்ரம்" அக்ஷம்' என்னும் இரண்டு சொற்களாலாயது. அதன் வரலாறு நீவிரறிந்ததே அதுவும் சிவசம்பந்த முடையது. திருநீற்றிற்குள்ளது போலவே இதற்கும் மகிமையுண்டு.
சிவமந்திரமாவது மறக்கக்கூடாததோர் தெய்வவொலி யென்று சுந்தரமூர்த்தி நாயனார் நற்றவாவுன்னை நான் மறக்கினும் சொல்லுநா நமச்சி வாயவே" என்னும் அரிய மொழிகளால் அறிவுறுத்தியருளினார். இம்மந்திரம் வேத இதயத்துள்ளது. சைவர்க்கு இது இன்றியமையாதது. 'மந்திரம்' என்னுங்கிளவி, நினைப்பவனைக் காய்பது என்னும் பொருளுடையது. இச்சிவமந்திரத்தைத் தூலம், சூக்குமம் காரணம் என்று நால்கள் பிரிப்பினும் அவையெல்லாம் உண்மையில் ஒரே பயனுள்ள வையே. ஆகமக்காரர் இதில் பதி பசு பாசலக்ஷணங்கூற முற்படுவர் எனக்கு இதில் தடையில்லை. இம்மந்திரம் செபிப்போர் பிறமந்திர மெதையுங்கையாளார். பின்னர்க் காரணங் காட்டுவல் எனது கோட்பாட்டை,
"மடமோட்டும்
கருணைதனை மறவேன்
நெஞ்சுள வளவுமாற் றார் நூலைத்
தொடமாட்டே
னவருரைக்கு முரைகேளே
னனியாயத் தொடக்கர் கோட்குட்
படமாட்டே
னருள்சுரந்து வினாயவொரு
மொழிப்பயனிற் படரு நோக்கம்
விடமாட்டே
னினிதளித்தி யெனதுகுகப்
பிரமமென விளங் கெம்மானே"
ஆசாரிய சுவாமிகள் நால்வரும் ஒரே தெய்வ உபாசகர் என்பதைச் சைவர்கள் கருத்தூன்றிப் பார்க்க வேண்டும். பினவரும் எடுத்துக் காட்டுகளைக் கருதுக.
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
" கொள்ளேன்
புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன்
நினதடியா ரொடல்லால் நரகம் புகினும்
எள்ளேன்
றிருவருளாலே இருக்கப்பெறி னிறைவா
உள்ளேன்
பிறதெய்வ முன்னையல்லா தெங்களுத்தமனே"
மணிவாசகர்.
(அ) "சிவ ஏகோத்யேயச் சிவம்கரஸ் ஸர்வமந்யத் பரித்யஜ்ய" (அதர்வசிகை)
(பொருள்: அந்நியமான யாவையும் விட்டு, சிவமெனும் பெற்றியால் மங்களத்தைச் செய்யும் சிவனையே தியானிக்க வேண்டும்.)
(ஆ) "தஸ்மாத் ஸர்வாந் பரித்யஜ்யத் யேயாந் விஷ்ண்வாதி காந்ஸுராந் சிவஏவ ஸதாத்யேயஸ் ஸர்வ ஸம்ஸார மோசக:" (சரபோபநிஷத்)
பொருள்: ஸம்ஸார துக்கநாச முக்திப் பிராப்தியின் பொருட்டு விஷ்ணு முதலிய ஸர்வ தேவர்களையும் விட்டு எஞ்ஞான்றும் தியேயனாகவுள்ள சிவனையே தியானிக்க வேண்டும்.
இவை
போன்ற பிரபலப் பிரமாணங்களால் ஒருவனுக்குப் பல மூர்த்தி வழிபாடு கூடாது என்று கூறுவது
நன்றாய்த் தெரிகின்றது. ஒரே மூர்த்தியும் ஒரே மந்திரமும் வேண்டும். இதைச் சைவர் நன்கு
கவனிப்பதில்லை. பலதெய்வ வழிபாடு அவர்கட்குக் கூடாது. சொரூப லக்ஷணத்திற்குப் போனால்
எல்லை ஒன்றும் ஏற்படாது. அது ஞானிகட்குரியது. ஏனையோர் உருவத்தைப் பற்றிச் செல்வோர்,
சரியையாதி மூன்றும் மூர்த்தியைப் பற்றியவை யாதலின் சொரூபம் மூர்த்தமல்ல. மூர்த்தி அதற்கு
ஆசாரியன் பெரும்பாலோர் சாரூபத்திற்குள் நிற்போர். இவர்கள் ஒரே மூர்த்தியை வழிபடாவிடின்,
பொதுக் கதிக்குரியராய் இந்திரபத மட்டும் கிடைக்கப் பெறுவர். தியானமென்பது ஒரு மூர்த்தி
பாவனையிலாவது, இரண்டு மூர்த்தி யுபாசனை கூடாது. இப்படிச் செய்வது, ஒரு கோயிலை இடித்து
இன்னொரு கோயிலைக் கட்டுவதை யொக்கும். சிவனையே கதியாகக் கொள்பவன், விண்டுவாதி தேவர்களை
விடவேண்டும். பிற மூர்த்தி யுபாசகர்கட்கும் இதுபோன்ற நியமம் ஏற்றதே. ஆனால், மற்ற தேவர்களைக்
கண்டால் பொதுவகையில் வழிபடுமின் பலசில்லரை மந்தி ரங்களை விரும்பன்மின் எத்துன்பம்வரினும்
உம்மொரு மூர்த்தியையே கொண்மின். ஆசாரிய சுவாமிகள் நால்வரும் சிவனைத் தவிரவேறெத்தெய்வத்தின்
மேலும் பாடவில்லை கருதுமின். அவர்கள் காலத்துக்கு முன்பு பல தெய்வ வழி பாடிருந்தது
அவர்கள் ஒரே தெய்வம் வெண்டுமென்று வற்புறுத்தினர்.
கிறிஸ்துவ மதத்தில் கிறிஸ்துநாதரே மூர்த்தி ஸ்தானத்திலுள்ளார். இஸ்லாத்தில் முகம்மது நபி அந்நிலையில் நிற்கின்றார். இவ்வுண்மைகளை யெல்லாம் கருதி, சைவ சமயாசாரியார்கள் உபதேசித்தருளியபடி சைவர் ஏகமூர்த்தி வழிபாட்டில் உறைத்து நிற்கக் கடவர்.
உங்கட்குச் சிவன் கூட வேண்டியதில்லை; சம்பந்தரைப் பற்றினால் சாலும் இவரைப் பற்றினால், சிவனைப் பற்றியுள்ள இவர், அவரிடம் உங்களைச் சேர்ப்பர். சீகாழிக் கண்ணுடைய வள்ளலார்க் கிம்முறை பயன்பட்டது.
முத்தியிலிருப்பவர் தோன்றுவரோ என்று ஐற வேண்டா. திருவுளப்பாட்டின்படி எதுவுமாம். அதனால் அவர் முத்திநிலை கெடாது. இப்படிப் பலரிருக்கலாம்.
"வானமிடிந்து
தலையில் விழும்படி*
வம்புவந்தாலும் என்னை - அந்தக்
கானமயில்
முருகையன் திருவருள்
கைவிட மாட்டாதே"
*இது சுவாமிகள் அருளிச் செய்த திருவலங்கற்றிரட்டிலுள்ள சமாதான சங்கீதத்தின் சரணங்களி லொன்று, (திருவலங்கற்றிரட்டு – முதன்மண்டலம்.)
என்னும் உறுதிப்பாட்டை உய்த்துணருங்கள். தன்னுயிர் போமளவும் இயேசுநாதர் கடவுளை விடவில்லையே! கருதுங்கள். பல தெய்வ வழிபாடுடை யானொருவனை நோக்கி, "நீ யாருடைய பக்தன்" என மற்றொருவன் வினவின், அவன் என்ன சொல்லுவான்? பசபசவென விழிப்பானன்றே ஆண்டவன் பத்தன் என்னலிற் சாரமில்லை! பொதுவாதலின். அன்னாற்குச், சிவ சந்நிதியிற் பாத்திய மில்லை.
இந்நாட்டில் எழுந்த அநந்த நூல்களில் சிவனே பிர பல மூர்த்தியாயுள்ளார். அவருக்குப் பல வடிவமுண்டு மண்டை மாலையும் கோரரூபமும் உள்ளனவே என்னில் அக்கோலம் சங்கார கிருத்திய மூர்த்தியாகிய ஒரு மூர்த்திக்குத்தான் உண்டு. சிவன் நிரம்பிய அழகிய மூர்த்தி. இரு கரங்களோடுங் கூட வருவார். இயமனுக்குக்கூட இச்சத்தியுள்ளது. இராமர் ரிஷிபத்தராதலால் அவர் கடைசிக் காலத்தில் இயமன் ரிஷியாய் வந்தான். இயமனுக்குள்ள இச்சத்தி சிவனுக்கா இராது? சிவனுக்குத் தன்னுபாசகர் வேண்டு முருவமெல்லாம் எடுக்கும் ஆற்றலுண்டு எப்போதுமே மண்டை மாலையுடையவரவரென்றெண்ணற்க எப்போதும் அவர் கொண்டுள்ள வடிவம் மகரிஷி வடிவம் ரிஷிகளால் வேண்டப்பட்டு அவர்கட்கு நாயகமாய்ச் சிவனார் விளங்குவர் "திருவுடை மன்னரைக் காணில் திரு மாலைக் கண்டேனே" என்று புகழப்படுந் தன்மை யுடையரே யெனினும், அரசரை ரிஷிகள் வணங்கார். இப்பெருமையுடைய ரிஷிகளுந் தேவர்களும் மனிதர்களும் வணங்கும் மஹரிஷி சிவனென்றுணர்மின் ஆதலின் அவரை வணங்குவோரே மோக்ஷம் பெறுவர். பிறதேவரெவரும் தம்முபாஸகர் மனிதராய் வந்த பிறகுதான் தம் கதிகொடுப்பர். ஆனால் கதி நாயகரான சிவனாரோ அஃறிணை யுயிர்ப் பொருள் கட்கும் பரகதி கொடுத்துள்ளார். குரங்கு, கரிக்குருவி, பைஞ்சீலி வாழை முதலியவற்றிற்கும் முத்தி நல்கிய செய்தி கருதுக
இதுகாறும் விவரித்த வாற்றால் சைவர்க்கு வாய்த்த சிவமாந் தெய்வமும். சிவமந்திரமும் உபகரணமும் பெருஞ் சிறப்புடையன என்பது போதரும். இப்பெரும் ஆதிக்கத்தைக்கைவிட்டு, சைவர் ஏன் விலகவேண்டும்? கிறித்துவர் முகம்மதியர், புத்தர் முதலிய மதத்தினர் தத்தம் நிலை நல்லதென்று கொண்டு அதன் நெறியிற் செல்லா நிற்க, சைவர் மட்டும் ஏன் தங்கள் பெரும் பாக்கியத்தை உதைத்துத் தள்ள வேண்டும்? அது பெரும் பாவமாகுமன்றோ!
இங்கோர், மறைபொருளாயுள்ள உண்மையை விளக்குவல்; திரிகால ஞானமுடையாரை அது கொண்டே ஞானியென்னல் கூடுமோ என்பது விடயம் சிவஞானங் கொண்டு பார்த்தால் திரிகாலஞான மட்டுமல்ல, பதிஞானமு முண்டாம். இப்பதிஞானத்தால் பார்ப்போர்க்கு உலகம் தோன்றாது. வெளியே பன்னிரண்டங்குலம் ஓடும் வாயுவை ஆறங்குலத்திலடக்கும் போது, திரிகால ஞானமுதிக்கும். அந்நிலையிலும் ஆன்மதரிசனம் வாய்ப்பதில்லை. மனம்பக் குவப்பட்டு நிற்பதே கிட்டிய பயன். அது ஆத்மசக்தி, சிவசக்தியன்று. அது உட்கண்; மனநிரோதத்தில் திறக்கும். அதுவே சிவஞானமன்று சிவஞானத்திற்கு மிகவும் தாழ்ந்தது சிவனை விட்ட எந்த ஞானமும் பிரயோஜனப் படாது உட்கண் திறக்கப் பெற்றானொருவன் சிவன துருவத்தைப் பார்க்கவும் கூடும். எனினும் அதனாலேயே அம் மூர்த்தியின் சிநேக பாத்தியம் கிடைத்து விடாது. அப்பாத்தியத்தைச் சம்பாதிக்கவேண்டும். சிவனடியவன் என்னுந் தன்மைக்கு இந்தத் திரிகால ஞானமுங் குறைந்ததே.
இனிச் சிவனுடைய எட்டு மூர்த்தங்களாவன. ஐந்து பூதங்கள், சூரிய சந்திரர்கள், ஆன்மா என்பன. சித்து அசித்து, சிதசித்து எல்லாமிவற்றிலுண்டு. அநுக்கிரகார்த்தமாக அவர் கரசரணாதிகளோடு தோன்றி யருளுவார். ஆன்மாவில் அவர் அந்தரியாமியாயிருத்தலால் அவரைப் பற்றிப் பிடிக்குமாற்றலில் மனிதர்கள் வேறுபாடுடையராயுள்ளார்கள். சைவர் சிவனென்னு மூர்த்தியைச் செவ்வனே பற்றி வழிபடக் கடவர். இன்றேல் உயர்கதி வாய்க்காது. பல தெய்வ வழிபாடு வியபிசாரம் போன்றது. வெளிப்பூசைகளினும் உட்பூசைகளே சிறந்தவை.
"யதா
சர்ம வதாகாசம் வேஷ்ட யிஷ்யந்தி மா நவா :
ததா
சிவம விஜ் ஞாய து : கஸ்யாந்தே பவிஷ்யதி"
என்ற
சுவேதாசுவதரச் சுருதியைக் கருதுக.
(இதன் பொருள்: எப்பொழுது மனிதர்கள் ஆகாயத்தைச் சர்மமாக எடுத்துப் போர்த்துக் கொள்வார்களோ அப்பொழுது தான் சிவஸேவையின்றித் துக்கமற்ற மோக்ஷத்தை யடைவார்கள்.]
சிவ சேவை இல்வழி எந்த ஞானமும் கீழ்ப்பட்டதே சிவனை அறிந்தன்றி மிருத்தியுவைத் தாண்ட வியலா தென்றும் பிரபல சுருதி முழங்கும் ஆனால், " காண்பா ரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே " என்பதையும் மறக்க வியலாது. காணும் வேட்கை தேவை. பாவியாய் னும் சிவ சப்தத்தால் சைவனாக வேண்டும்.
யானும் அறுமுகச் சிவனை வணங்கும் ஒரு சைவனே. யான் பிரப்பன் வலசைக் காட்டில் நிட்டை கூடியிருந்த காலத்து, ஒரு நாள் விடியுங்காலம் சுமார் 3மணி வேளை யில், 'நிட்டையிலிருந் தெழுந்து விடு என்னுமொரு சப்தம் எனக்குக் கேட்டது. எழேன் என்று இருந்த விடத்தி ருந்தேன். 'நீ எழுந்துவிட வேண்டும்' என்று முன்னிலும் பெருத்ததோர் தொனி உண்டாயது. அதற்கும் யானசைய வில்லை. 'ஏகாதச ருத்திரர் வருகின்றனர் எழுந்திரு' என் னும் ஆணை பிறந்தது. முருகவேளாணை வரினல்லது எழுந்திரேன்' என்று எனக்குள் விடையிறுத்தேன். பின்பு முருகனே இக்கட்டளை யிடுபவன்' என்று உணர்த்தப் பட்ட வளவில் வணங்கி எழுந்தேன். இது போன்றதோருறுதியோடு நின்றாலன்றி எப்பெரும் பேற்றையும் அடைய இயலாது. ஆதலின் நன்னெறியில் இயன்ற மட்டும் உறுதியோடு நின்மின்கள்.
வெளிப் பூசைகளில் மாகேச்சுர பூசை சிறந்தது. சிவனடி யார்க்குத் திருவமுது செய்விப்பது மாகேச்சுர பூசை மெய்யடியாரைக் கண்டு பிடித்தலருமையாதலின், அப்பூசையைப் பொதுவாகச் செய்க இதற்குபகாரமாக சேர்க்கினும் சேர்க்க. ஆனால் இதைக் கைவிடற்க.
No comments:
Post a Comment